திட்டு வாங்கிய சம்பாவ்லி
தற்போது நடந்து வரும் கால்பந்து உலகக்கோப்பை குரூப் சுற்று போட்டிகளில், அர்ஜென்டினா தன் முதல் ஆட்டத்தை ஐஸ்லாந்தோடு 1-1 என்ற கோல் கணக்கில் சமன் செய்தது. அப்போதே, முன்னாள் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் மரடோனா அவரை எச்சரிக்கும் வகையில், சம்பாவ்லி தன் செயல்பாடுகளை மாற்றிக்கொள்ளவிட்டால், நாட்டுக்கு திரும்ப முடியாது" கூறியிருந்தார். சம்பாவ்லி சரியான வகையில் திட்டமிடவில்லை என பலரும் இந்த போட்டிக்குப் பின் கூறினார்கள்.
அழுத்தத்தில் இரண்டாவது ஆட்டம்
அதற்கு பின் இரண்டாவது ஆட்டத்தில் குரோஷியா அணி 3-0 என்ற கோல் கணக்கில் அதிரடியாக அர்ஜென்டினாவை நிலைகுலைய வைத்தது. கோல் அடிப்பதில் மன்னனான மெஸ்ஸிக்கு அருகில் அதிகளவில் பந்து செல்லாத வகையில் க்ரோஷியா அணி அற்புதமாக விளையாடியது. சம்பாவ்லியின் மோசமான திட்டங்கள் மற்றும் க்ரோஷியாவின் அறிவுப்பூர்வமான விளையாட்டும் சேர்ந்து அர்ஜென்டினா வீரர்களை அழுத்தத்தில் ஆழ்த்தி மோசமான உலகக்கோப்பை தோல்வியை தழுவச் செய்தது.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய செம்போலி
ஆட்டம் முடிந்த பின், சம்பாவ்லி தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, அணி தோற்றதற்கான பல்வேறு காரணங்களை கூறினார். அதில் உச்சகட்டமாக, தன் திட்டங்களை வீரர்கள் சரிவர புரிந்துகொள்ளவில்லை எனவும், மெஸ்ஸி கோல் அடிக்க உதவும் வகையில் பிற வீரர்கள் ஆடவில்லை எனவும் கூறி வெந்த புண்ணில் வேல் பாய்ச்ச, தற்போது அணியின் வீரர்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
கடுப்பில் அகுவேரோ
இந்த நிலையில், அர்ஜென்டினா வீரர் அகுவேரோவிடம். சம்பாவ்லியின் கருத்துக்களை பற்றி செய்தியாளர்கள் கேள்வி கேட்ட போது, கடும் விரக்தியிலும், கோபத்திலும் இருந்த அகுவேரோ, "அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும்" எனும் பொருள் கொள்ளும்படிக் கூறி விட்டு பாதியிலேயே பேட்டியை முடித்து விட்டு கிளம்பினார்.
செம்போலியை நீக்குங்கள்
அர்ஜெண்டினாவின் செய்தியாளர்களும் சம்பாவ்லி மீது வெறுப்பில் இருப்பதாக ரஷ்யாவில் உள்ள மற்ற நாட்டின் செய்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள். தற்போது மூன்றாவது ஆட்டத்தில் நைஜீரியாவை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அர்ஜென்டினா வீரர்கள், சம்பாவ்லியை கோச் பதவியில் இருந்து மூன்றாவது ஆட்டத்திற்கு முன் நீக்க வேண்டும் என கூறியதாக செய்திகள் பரவி வருகிறது. இந்த செய்திக்கு, அர்ஜென்டினா அணி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
எப்படியோ, மரடோனா எச்சரித்தது போல சம்பாவ்லி அர்ஜென்டினாவிற்குள் இனி கால் வைக்க முடியாது என தெரிகிறது.