ஜாம்ஷெட்பூர் : இந்தியன் சூப்பர் லீக் அணியான ஜாம்ஷெட்பூர் கால்பந்து கிளப்பில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர கால்பந்து வீரர் டிம் கேஹில் இணைந்துள்ளார்.
இந்த இணைப்பு இந்தியன் சூப்பர் லீகில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கேஹில் ஆஸ்திரேலிய கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்தவர். 107 சர்வதேச போட்டிகளில் 50 கோல்கள் அடித்துள்ளார். 2004 முதல் 2018இல் சமீபத்தில் முடிந்த உலகக்கோப்பை கால்பந்து தொடர் வரை ஆடிய கேஹில் தன் ஓய்வை அறிவித்து இருந்தார். இவருக்கு 38 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் இவர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் சிட்டி கிளப் அணிக்காகவும், சீனாவின் ஷாங்காய் ஷென்ஹுவா, க்ரீன்டவுன், இங்கிலாந்தின் மில்வால், எவர்டன், அமெரிக்காவின் நியூயார்க் ரெட் புல்ஸ் அகிஒய கிளப் அணிகளுக்காக ஆடி இருக்கிறார்.
இந்நிலையில் தன் சர்வதேச போட்டிகளின் ஓய்வு அறிவிப்புக்கு பின், இந்திய கிளப் அணியான ஜாம்ஷெட்பூர் அணியில் இணைந்துள்ளார்.
இது பற்றி அவர் வெளியிட்ட ட்வீட்டில், "நான் மிகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன். இந்தியன் சூப்பர் லீகின் ஜாம்ஷெட்பூர் கிளப்பில் இணைகிறேன். கிளப்போடு நான் பேசியதில் அவர்களின் தொழில்முறையும், அவர்கள் அடைய நினைக்கும் இலக்குகளும் என்னை கவர்ந்துள்ளன. எனது தலைமை மற்றும் அனுபவம் கொண்டு அவர்களுக்கு நிச்சயம் உதவ முடியும். நான் இந்த விளையாட்டு வளர்வதற்கும், இளம் சிறுவர்கள் கால்பந்து விளையாடவும் ஊக்கப்படுத்துவேன்" என கூறினார்.
ஜாம்ஷெட்பூர் கிளப் கடந்த ஆண்டு முதல் இந்தியன் சூப்பர் லீகில் ஆடி வருகிறது. கடந்த சீசனில் மிக குறைந்த கோல் அடித்த அணிகளில் இரண்டாம் இடம் பிடித்தது இந்த அணி. கேஹில் வருகைக்கு பின் அந்த நிலை மாறுமா என பார்க்கலாம்.