டெல்லி: இத்தாலி வீரர் மரியோ பாலோடிலி, உலகின் தலைச் சிறந்த கால்பந்து வீரர்களுக்கு புதிய சவாலை விடுத்துள்ளார். கோல் கம்பத்துக்கு பின்னால் இருந்து கோல் அடித்து, இதுபோல் செய்ய முடியுமா என்று சவால் விடுத்துள்ளார்.
ரஷ்யாவில் ஃபிபா உலகக் கோப்பை முடிந்தாலும், உலகெங்கும் கால்பந்து ஜூரம் இன்னும் குறையவில்லை. கிளப் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் துவங்கியுள்ளன.
இந்த நிலையில், இத்தாலியின் அதிரடி முன்கள வீரரான மரியோ பாலோடிலி, ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், கோல் கம்பத்துக்கு பின்னால் இருந்து பந்தை உதைத்து அவர் கோலாக்கியுள்ளார். இதுபோல் செய்ய முடியுமா என்று பிரேசிலை சேர்ந்த ரியல் மாட்ரிட் வீரர் மார்சலோவுக்கு அவர் சவால் விடுத்துள்ளார்.
இதைத் தவிர கால்பந்து உலகில் தற்போது மிகவும் பிரபலமாக உள்ள நெய்மர், ஜலாடன் இப்ராஹிமோவ், கிளியான் மாப்பே, பால் போக்பா உள்ளிட்டோருக்கும் இந்த சவாலை அவர் விடுத்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் கிளப்பான நைஸ் அணிக்காக விளையாடி வரும் பாலோடிலி, அந்த அணிக்காக 51 ஆட்டங்களில் 33 கோல்களை அடித்துள்ளார்.
நைஸ் அணியின் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்காமல் இருந்ததால், சர்ச்சையில் சிக்கியதுடன், ரசிகர்களின் வெறுப்பையும் சம்பாதித்தார். அதையடுத்து தற்போது மீண்டும் பயிற்சியில் இறங்கியுள்ளார்.