அர்ஜென்டினா சட்டையை மாற்றி பிரேசில் சட்டை.. கைதியின் படத்தை மாற்றிய போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்
தாகா: வங்கதேசத்தில் அர்ஜென்டினா மற்றும் பிரேசில் கால்பந்து ரசிகர்களுக்கு இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த கைதி அணிந்திருந்த அர்ஜென்டினா ஜெர்சியை, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் பிரேசில் ஜெர்சியாக மாற்றிய போலீஸ் அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
வங்கதேசத்தின் பாரிஷால் நகரில் உள்ள முகமதுபூர் காலனியில் கடந்த திங்கட்கிழமை ரஸ்ஸல் ஹவ்லாதர் (35 வயது) என்ற போதைப்பொருள் கடத்தல்காரரை போலீஸார் கைது செய்தனர். அப்போது அவர் அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜெர்சியை அணிந்திருந்தார். இதைப் படம் பிடித்த பாரிஷால் பெருநகர போலீஸ் பிரிவைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் தன்சில் அகமது, ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அந்த அர்ஜென்டினா ஜெர்சியை பிரேசில் ஜெர்சியாக மாற்றினார். பின்னர் இந்த எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை ஊடகங்கள் மற்றும் போலீஸாரின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்துள்ளார்.

இந்த ஏஐ எடிட்டிங்கை சமூக வலைதளங்களில் கால்பந்து ரசிகர்கள் எளிதாகக் கண்டுபிடித்தனர். புகைப்படத்தில் உள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் போலீஸாரை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். இதையடுத்து, பாரிஷால் போலீஸ் கமிஷனர் எம்.டி.ஆஷிக் சயீத், சப்-இன்ஸ்பெக்டர் தன்சில் அகமதுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதோடு, அவரை ஊடகப் பிரிவில் இருந்தும் நீக்கியுள்ளார். "பிரேசில் அணியின் உலகக் கோப்பை ஆட்டங்கள் தீவிரமாக உள்ளதால், பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இந்த மாற்றத்தைச் செய்தேன்" என்று தன்சில் அகமது ஒப்புக்கொண்டுள்ளார்.
தற்போது ஃபிஃபா உலகக் கோப்பை 2026 கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பிரேசில் அணி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தகுதி பெற்று நார்வேயை எதிர்கொள்ள உள்ளது. மற்றொரு புறம், அர்ஜென்டினா அணி தனது ரவுண்ட் ஆஃப் 32 போட்டியில் கேப் வெர்டே அணியை எதிர்கொள்கிறது. இத்தகைய உலகக் கோப்பை ஜுரத்திற்கு மத்தியில் பங்களாதேஷ் போலீஸ் அதிகாரியின் இந்த வினோத செயல் இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications
