காயம்
இதனிடையே செர்பியா அணிக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி அபார வெற்றிபெற்றது. இந்தப் போட்டியின் போது பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மாருக்கு கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இந்த ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் பந்தை எதிர்கொண்டபோது காயம் அடைந்த நெய்மார், மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
நெய்மார் விலகல்
இதனைத் தொடர்ந்து அடுத்த இரு போட்டிகளில் நெய்மார் விளையாடமாட்டார் என்று பிரேசில் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நட்சத்திர வீரர் நெய்மார் இல்லாதது பிரேசில் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பலம் வாய்ந்த சுவிட்சர்லாந்து மற்றும் கேமரூன் அணிகளை பிரேசில் அணி வீழ்த்த அதிக வாய்ப்புகள் இருந்தாலும், நெய்மார் இல்லாதது எதிரணிகளுக்கு மனரீதியாக வலிமை கொடுக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
நெய்மார் மீது விமர்சனம்
இதனிடையே நெய்மார் காயம் குறித்து பிரேசில் ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வந்தனர். பிரேசில் அணி வீரர் நெய்மாருக்கு திறமையை விடவும், அதிக தலைகனம் இருப்பதாக விமர்சித்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் நெய்மாருக்கு பிரேசில் அணிக்கு ஆடுவதை விடவும், கிளப் போட்டிகளில் ஆடுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
ரஃபின்ஹா காட்டம்
இதுகுறித்து பிரேசில் அணியின் ரஃபின்ஹா கூறுகையில், அர்ஜென்டினா ரசிகர்கள் மெஸ்ஸியை கடவுளை பார்க்கிறார்கள். இன்னொரு பக்கம் போர்ச்சுகல் அணி ரசிகர்கள் ரொனால்டோவை ஒரு மன்னரை போல் கொண்டாடுகிறார்கள். ஆனால் பிரேசில் ரசிகர்கள் மட்டுமே நெய்மாரை தொடர்ந்து பழிக்கிறார்கள் என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதேபோல், நெய்மாரின் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு பிரேசிலில் பிறந்தது தான். இந்த நாடு அவரது திறமைக்கு தகுதியற்றது என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.