டெல்லி:விளையாட்டுப் பிரியர்களுக்கு நாளை செம வேட்டை காத்திருக்கு. ஒரே பக்கம் ஃபிபா உலகக் கோப்பை காலிறுதி போட்டிகள் நடக்கின்றன. மறுபக்கம் இந்தியா, இங்கிலாந்துக்கு இடையேயான இரண்டாவது டி-20 போட்டி நடக்கிறது.
ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் கடந்த மாதம் துவங்கி நடந்து வருகிறது. காலிறுதி சுற்றை எட்டி பரபரப்பை எகிற வைத்து வருகிறது. உலகின் தலைச் சிறந்த அணிகள் என்ற பெயர் பெற்றவர்களுக்கு குட்டி மற்றும் புதிய அணிகள் அதிர்ச்சி வைத்தியம் அளித்து, ஃபிபா பீபரை எகிற வைத்து வருகின்றன.
காலிறுதி போட்டிகள் நாளை துவங்குகின்றன. நாளை இரவு 7.30 மணிக்கு துவங்கும் ஆட்டத்தில் தடுப்பாட்டத்தில் மிகவும் வலுவாக உள்ள உருகுவே அணியுடன் பிரான்ஸ் மோதுகிறது. இரண்டாவது பீலேவான மாப்பே, பால் போக்பா என பல பிரபல வீரர்கள் பிரான்ஸ் அணியில் கலக்கி வருகின்றனர்.
அதன்பிறகு இரவு 11.30 மணிக்கு துவங்கும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான பிரேசில் அணியுடன், சைலண்ட் கில்லரான பெல்ஜியம் மோதுகிறது. பெல்ஜியம் அணிக்கு எதிராக பிரேசிலின் நெய்மரின் பாட்சா பலிக்குமா என்று ரசிகர்கள் விவாதம் நடத்தி வருகின்றனர்.
உலகக் கோப்பை கால்பந்து காலிறுதி எட்டியுள்ள நிலையில், அடுத்த ஆண்டு நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயாராகி வரும் இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு எதிராக இரண்டாவது டி-20 போட்டியில் களமிறங்க உள்ளது. கார்டிபில் இரவு 10 மணிக்கு துவங்கும் இரண்டாவது போட்டியில் வென்று தொடரை வெல்ல கோஹ்லியின் இளம் சிங்கங்கள் துடிப்புடன் உள்ளன.
முதல் டி-20 போட்டியில் லோகேஷ் ராகுல் அபாரமாக சதமடிக்க, குல்தீப் யாதவ் 5 விக்கெட்களை வீழ்த்தி, இங்கிலாந்தை மிரள வைத்தார். இரண்டு கால்பந்து காலிறுதிப் போட்டிகளுக்கு இடையே நடந்தாலும், இந்தியா, இங்கிலாந்து டி-20 போட்டியிலும் பரபரப்பு பஞ்சம் இருக்காது.
நல்லவேளை நாளைக்கு லீவு போட வேண்டாம். அதே நேரத்தில், தொடர்ந்து இரண்டு சேனல்களை மாறி மாறி பார்க்க வேண்டியிருக்கும். அதனால், ரிமோட் வேலை செய்கிறதா, அதில் பேட்டரி இருக்கிறதா என்பதை சரிபார்த்து கொள்ளுங்கள். நீங்கள் முன்னெச்சரிக்கை முத்தண்ணாவை, அப்படியானால் பிபி மாத்திரையையும் கையில் வைத்துக் கொள்ளுங்கள்.