பிரேசில் vs தென் கொரியா
இந்த நிலையில் மூன்றாவது ஆசிய அணியான தென் கொரியா பிரேசில் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கியது. இந்தப் போட்டியில் காயம் காரணமாக ஓய்வில் இருந்து நட்சத்திர வீரர் நெய்மர் களம் புகுந்தார். கடந்த போட்டியில் பிரேசில் அணி கேமரூனிடம் தோல்வியை சந்தித்திருந்ததால், தென் கொரியா அணிக்கு வாய்ப்பு இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
பிரேசில் கொண்டாட்டம்
ஆனால் பிரேசில் அணியோ, அந்த காட்சியெல்லாம் இந்த ஆட்டத்தில் இல்லை என்று பதிலளிக்கும் வகையில் 7வது நிமிடத்திலேயே முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றது. சரி ஒரு கோல் தானே, தென் கொரியா பதிலடி கொடுக்கும் என்று கொஞ்சம் நம்பிக்கையுடன் இருந்த ரசிகர்களுக்கு பிரேசில் அணியின் நெய்மர் 13வது நிமிடத்தில் அடுத்த இடியை இறக்கினார்.
சாம்பா டான்ஸ்
13வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில், நெய்மர் நிதானமாக கோல் அடித்ததோடு, பிரேசிலுக்கு உரித்தான சாம்பா நடனத்தை ஆட தொடங்கினர். இந்த ஆட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்வதற்குள் 29வது நிமிடத்தில் ரிச்சர்லிசன் 3வது கோலை அடிக்க, இம்முறை பிரேசில் வீரர்களோடு அந்த அணியின் பயிற்சியாளரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
பிரேசில் மேஜிக்
இதன்பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் 36வது நிமிடத்தில் மீண்டும் பிரேசில் அணியின் லூகாஸ் அடிக்க, இம்முறை பிரேசில் அணி ரசிகர்கள் சாம்பா நடனத்தை ஆட தொடங்கினர். ஒரு கட்டத்தில் கால்பந்து மைதானத்தில் உள்ள ரசிகர்கள் அனைவருமே சாம்பா நடனத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதற்கு மேல் தென் கொரியாவை அடித்து போதும் என்று ரசிகர்களே சொல்லும் அளவிற்கு பிரேசில் வீரர்கள் விளையாட தொடங்கினர்.
4-0 என்று முன்னிலை
ஒரு கட்டத்தில் பிரேசில் வீரர்கள் தங்கள் திறமைகளையெல்லாம் வெளிகாட்ட தொடங்கினர். பின்னர் முதல் பாதி இறுதியில் நீண்ட நேரத்திற்கு பின் தென் கொரியா அணி அட்டாக் செய்தது. இருப்பினும் அதனை பிரேசில் கோல்கீப்பர் தடுத்து நிறுத்தினர். இதன் பின் பிரேசில் அணி 4-0 என்ற கோல் கணக்கில் முதல் பாதி முடிவில் முன்னிலை பெற்றிருந்தது.
இரண்டாம் பாதி தொடக்கம்
தொடர்ந்து இரண்டாம் பாதியில் வேறு எந்த கோலும் அடிக்கவிட கூடாது என்ற நோக்கத்தோடு தென் கொரியா வீரர்கள் களமிறங்கினர். அதற்கேற்ப முதல் 15 நிமிடங்களில் தென் கொரியா வீரர்கள் தடுப்பாட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தினர். பந்து கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் கால்களில் அதிக நேரம் இருப்பதை உணர்ந்த தென் கொரியா வீரர்கள், அட்டாக் செய்ய தொடங்கினர்.
தென் கொரியாவுக்கு ஆறுதல்
இதனால் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் 76வது நிமிடத்தில் தென் கொரியா முதல் கோல் அடித்தது. ஃபிரீ கிக் மூலம் உருவான வாய்ப்பில் தென் கொரிய அணியின் பைக் சியூங் ஹோ அசாத்தியமான கோலை அடித்தார். இதனால் ஆட்டத்தில் 4-1 என்ற நிலை ஏற்பட்டது. தொடர்ந்து இரண்டாம் பாதி கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்ட நிலையில், அதில் எந்த கோலும் அடிப்படவில்லை. முதல் பாதியை ஒப்பிடும் போது இரண்டாம் பாதியின் தென் கொரியா வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.
ஆசிய அணிகளுக்கு முடிவு
இருப்பினும் இரண்டாம் பாதி இறுதியில் 4-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிரேசில் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதேபோல் தென் கொரியா அணி தோல்வியடைந்து உலகக்கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், அனைத்து ஆசிய அணிகளும் வெளியேறியுள்ளன. மேலும் காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி குரோஷியாவை எதிர்கொள்ள உள்ளது.