
முதல் போட்டியிலேயே..
உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் பிரேசில் நாட்டில் கடந்த 12ம்தேதி தொடங்கி வரும் 13ம்தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் பிரேசிலுக்கும், குரோஷியாவவுக்கும் இடையே நடந்த போட்டியே சர்ச்சையை துவக்கி வைத்துவிட்டது.

சம பலம்
12ம்தேதி நடைபெற்ற பிரேசில்-குரோஷியா அணிகளுக்கு இடையேயான, கால்பந்தாட்ட போட்டியில், முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் சமமாகவே வெற்றி வாய்ப்பை பெற்றிருந்தன. ஒன்றுக்கு, ஒன்று என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தபோதுதான் அந்த தவறை நடுவர் செய்தார்.

பெனால்டி கிக்
ஆட்டத்தின் 71வது நிமிடத்தில், பிரேசிலின் முன்கள ஆட்டக்காரர் ஃபிரெட் மைதானத்தில் உருண்டு விழுந்தார். இதற்கு காரணம் குரோஷிய வீரர் டேஜன் லொவ்ரன் அவரை தடுக்கிவிட்டதுதான், என்று கூறி, விசில் ஊதிய நடுவர் யுச்சி நிஷிமுரா, பிரேசிலுக்கு பெனால்டி வாய்ப்பையும் கொடுத்தார்.

அடுத்தடுத்து கோல்கள்
பெனால்டி வாய்ப்பை தவறவிடுவார்களா பிரேசில் வீரர்கள். அருமையாக நெய்மர் கோல் போட்டு, சம நிலையில் இருந்த ஆட்டத்தை தன் அணிப்பக்கம் கொண்டுவந்தார். மனமுடைந்துபோனது குரோஷியா. இதன்பிறகு மேலும் ஒரு கோலை போட்டு பிரேசில் 3க்கு ஒன்று என்ற கணக்கில் குரோஷியாவை அலேக்காக வீழ்த்தியது.

பயிற்சியாளர் குமுறல்
நடுவரின் முடிவால் ஆத்திரமடைந்த குரோஷிய பயிற்சியாளர், நிகோ கோவக் "இது வெட்கப்பட கூடியது. உலக கோப்பை நடுவரின் செயல்போல இது தெரியவில்லை. பெனால்டி கொடுக்கும் அளவுக்கு அப்படி என்ன தவறு நடந்துவிட்டது. நிஷிமுரா செய்தது சரி என்று கை தூக்குபவர்கள் ஒருவர் கூட இருக்க முடியாது. நடுவர்கள் இது போல நடந்துகொண்டால், இந்த உலக கோப்பையில் 100 பெனால்டி கிக் கொடுக்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை. பிரேசிலுக்கு ஒரு அளவுகோலையும், பிற நாடுகளுக்கு மற்றொரு அளவுகோலையும் நடுவர் பின்பற்றியுள்ளார்" என்றார்.

யார் இந்த நடுவர்?
யுச்சி நிஷிமுராவுக்கும் பிரேசிலுக்கும் எந்த சம்ந்தமும் கிடையாது. அவர் ஜப்பான் நாட்டுக்காரர். எனவே தாய் நாட்டு பற்றால் இதுபோல பிரேசிலுக்கு வாய்ப்பை வழங்கியிருப்பார் என்று கூறும் குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல என்கின்றனர் பிரேசில் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications













