ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் போட்டிகள் நெருங்கும் நிலையில் தமது நாட்டின் நிதி நிலைமை மிக மோசமாக இருப்பதாக பிரேசில் அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென் அமெரிக்காவில் முதல்முறையாக வரும் ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டியும், செப்டம்பர் 7 முதல் 18-ந்தேதி வரை பாராலிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளன. இவ்விரு போட்டிகளும் அங்குள்ள ரியோ டி ஜெனிரோவில் நடைபெற உள்ளது.

ஜிகா வைரஸ் பீதியை கிளப்பியிருந்த நிலையில் தற்போது அந்நாட்டின் பொருளாதார நிலையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரியோ டி ஜெனிரோவுக்கு முக்கிய வருமானமாக இருந்து வந்த எண்ணெய் ஏற்றுமதியில் தற்போது சரிவு காணப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பெரும் சரிவை சந்தித்து இருப்பதும் இதற்கு ஒரு காரணம்.
பிரேசிலின் பொருளாதாரம் சென்ற ஆண்டில் மட்டும் 3.8% வீழ்ச்சியை கண்டது. இது கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியாகும். இதே நிலையே இந்த ஆண்டும் தொடர வாய்ப்பிருப்பதாக சர்வதேச நிதியமும் கணித்துள்ளது.
இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் ரியோடிஜெனிரோ மாகாணம், பொருளாதார நிலைமை மிக மோசமாக இருப்பதாக பிரகடனம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து அரசுக்கு சொந்தமான பொதுச் சொத்துக்களை விற்று ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு தேவையான நிதியை விரைவாக திரட்ட அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை மேற்கொள்வதை தவிர வேறு வழியில்லை என்றும் அப்படி செய்யாவிட்டால் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் பிரேசில் தெரிவித்துள்ளது.