கொச்சி: கொச்சியில் நேற்று நடந்த பிரேசில் - ஸ்பெயின் ஆட்டத்தை பார்க்கும்போது, இது 17 வயதுக்குட்பட்டவர்கள் ஆடும் போட்டியாகவே உணர முடியவில்லை. வேகம், ஆட்டத் திறன், வெற்றி வேட்கை என, இரு அணிகளும் வெளிப்படுத்தினாலும், பிரேசில் ஆதிக்கம் செலுத்தியது.
17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இந்தியாவில் நடக்கின்றன. கொச்சியில் நேற்று இரவு நடந்த டி பிரிவு ஆட்டத்தில், பிரேசிலும், ஸ்பெயினும் மோதின.
இதில் மூன்று கோல்களையும் பிரேசில் வீரர்களே போட்டனர். ஆனால் ஒரு சேம்-சைடு கோலால், ஸ்பெயினின் கணக்கில் அது சென்றது. அந்த ஒரு தவறைத் தவிர, இரு அணிகளின் ஆட்டமும் அபாரமாக இருந்தது.
பந்தைக் கடத்தி செல்வது, எதிரணிக்கு சவால் விடுப்பது, தடுப்பாட்டம் என, அனைத்திலும் பிரேசில் வீரர்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது.
போட்டியின் துவக்கத்தில் சிறிது நேரம் ஸ்பெயின் அணி அபாரமாக ஆடினாலும், பிரேசிலின் அதிரடி துவங்கியதும் அது பெட்டிப் பாம்பாக மாறியது. இந்தப் போட்டியில் பிரேசில் 2-1 என்ற கணக்கில் வென்றது.
டி பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் நைஜர் அணி 1-0 என்ற கணக்கில் வடகொரியாவை வென்றது.
சி பிரிவில் நடந்த ஆட்டங்களில் ஜெர்மனி 2-1 என்ற கணக்கில் கோஸ்டாரிகாவையும், ஈரான் 3-1 என குய்னாவையும் வென்றன.
இன்று இ பிரிவில் நடக்கும் ஆட்டங்களில் நியூ காலடோனியா - பிரான்ஸ், ஹோண்டுராஸ் -ஜப்பான் அணிகள் மோதுகின்றன. எப் பிரிவில் சிலி - இங்கிலாந்து, ஈராக் - மெக்சிகோ மோதுகின்றன.