மாஸ்கோ: 21வது ஃபிபா உலகக் கோப்பையின் காலிறுதிக்கு ஐந்து முறை சாம்பியனான பிரேசில் 16வது முறையாக நுழைந்து சாதனை புரிந்துள்ளது. ஜெர்மனி மட்டுமே 16 முறை காலிறுதிக்கு நுழைந்துள்ளது.
21வது ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடந்து வருகின்றன. இதில் இன்று நடந்த நாக் அவுட் போட்டியில் 2-0 என மெக்சிகோவை வென்று பிரேசில் காலிறுதிக்கு முன்னேறியது.
இதுவரை நடந்துள்ள அனைத்து உலகக் கோப்பையிலும் பங்கேற்றுள்ள ஒரே அணியான பிரேசில், 16வது முறையாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதற்கு முன் நடப்பு சாம்பியனான ஜெர்மனி 16 முறை காலிறுதிக்கு முன்னேறிய சாதனையை வைத்திருந்தது. தற்போது அதை பிரேசில் சமன் செய்துள்ளது.
ஜெர்மனி 4 முறை மட்டுமே கோப்பையை வென்றுள்ளது. பிரேசில் 5 முறை கோப்பையை வென்றுள்ளது. இந்த உலகக் கோப்பையில் ஜெர்மனி முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளது.
இன்றைய ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும், மெக்சிகோ கடைசி வரை பிரேசிலுக்கு கடும் சவால் விடுத்தது. மெக்சிகோ தொடர்ந்து 7வது முறையாக நாக் அவுட் சுற்றில் வெளியேறியுள்ளது.
மெக்சிகோவின் கோல் கீப்பர் கிலர்மோ ஓச்சா இன்றைய ஆட்டத்தில் மிகவும் சிறப்பாக விளையாடினார். பிரேசிலின் 8 கோல் வாய்ப்புகளை அவர் தடுத்து நிறுத்தினார். இந்த உலகக் கோப்பையில் ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 9 கோல்களை தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த உலகக் கோப்பையில் அவர் 20 கோல்களை தடுத்துள்ளார்.