பிரேசிலியா: பிரேசிலா இது.. என்று எல்லோரும் அதிர்ச்சியாகிப் போனார்கள் நேற்று பிரேசில் அணி, சிலியிடம் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து. கடைசியில் அதிர்ஷ்டவசமாக பெனால்டி ஷூட் அவுட்டில் பிரேசில் ஜெயித்து காலிறுதிக் கரையைச் சேர்ந்தது.
ஆனால் பிரேசில் - சிலி ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பிரேசில் நாட்டைச் சேர்ந்த 69 வயது ரசிகர் ஒருவர் பாவம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து போனார்.

அந்த ரசிகர் பிரேசில் ஆடிய ஆட்டத்தை ஒரு பாரில் அமர்ந்து பெரும் பதைபதைப்புடனும், டென்ஷனுடனும் பார்த்துக் கொண்டிருந்தார். முழு நேரத்தில் போட்டி 1-1 என்ற கணக்கில் இருந்ததால் அவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார். அந்த சமயத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்களிடம் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். அவருக்கு சர்க்கரை வியாதி வேறுஉள்ளதாம். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் மரணமடைந்தார்.
இவர் மட்டுமல்லாமல், நேற்று பிரேசில் - சிலி ஆட்டத்தின்போது கிட்டத்தட்ட 100 பேருக்கு மேல் நெஞ்சுவலி, பதட்டம், உடல் நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளுக்கு வந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
பிரேசில் நாட்டில் கிட்டத்தட்ட அத்தனை பேருமே கால்பந்து ரசிகர்கள்தான். அந்த நாட்டின் சுவாசமே கால்பந்துதான். எனவேதான் நேற்று பிரேசில் அணி தட்டுத் தடுமாறி சிலியிடமிருந்து தப்பி காலிறுதிக்குள் புகுந்தது அந்த நாட்டு ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்து விட்டது.