ரியோடி ஜெனிரோ: ஃபீஃபா உலகக் கோப்பை போட்டிகளில் பிரேசில் அணி தோல்வி அடைந்ததை அடுத்து அந்த அணியின் பயிற்சியாளர் லூயி பிலிப் ஸ்கோலாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஃபீஃபா கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் பிரேசிலில் நடைபெற்றது. இந்த முறை பிரேசில் அணி கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டு மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் துவக்கத்தில் இருந்தே தத்தித் தத்தி வெற்றி பெற்ற பிரேசில் அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் 7-1 என்ற கோல் கணக்கில் படுகேவலமாக தோல்வி அடைந்தது.
இதையடுத்து மூன்றாவது இடத்திற்காக நடந்த போட்டியிலும் நெதர்லாந்திடம் 3-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் தோல்வி அடைந்தது. இதை பார்த்து பிரேசில் ரசிகர்கள் கோபப்பட்டனர், கண்ணீர் விட்டனர். இந்நிலையில் பிரேசில் அணியின் பயிற்சியாளர் லூயி பிலிப் ஸ்கோலாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஸ்கோலாரியின் ஒப்பந்தத்தை பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு புதுப்பிக்காது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தனது எதிர்காலம் குறித்து பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு நிர்ணயம் செய்ய தான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று ஸ்கோலாரி தெரிவித்துள்ளார்.
கடந்த 2002ம் ஆண்டு ஜப்பானில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் பிரேசில் வெற்றி பெற உதவியவர் ஸ்கோலாரி. சொந்த மண்ணில் பிரேசில் வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றமானதால் நாட்டு மக்கள் கவலை அடைந்துள்ளனர்.