டெரசோபோலிஸ்: இன்று நள்ளிரவு நடைபெறும் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் பிரேசில்-நெதர்லாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.

அரையிறுதியில் ஜெர்மனியுடன் மோதிய பிரேசில் அணி, 7-1 என்ற கோல் கணக்கில் படுதோல்வியை அடைந்தது. அந்த அணியின் வரலாற்றில் இதுதான் மிக மோசமான தோல்வி. இதையடுத்து ஜெர்மனி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. மற்றொரு அரையிறுதியில் நெதர்லாந்தை, பெனால்டி ஷூட்டில் வீழ்த்தி அர்ஜென்டினா இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. எனவே மூன்றாவது இடத்துக்கான அணியை தேர்வு செய்ய இன்று போட்டி நடைபெறுகிறது.
இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 1.30 மணிக்கு, பிரேசிலியா நகரிலுள்ள மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், நெதர்லாந்தை பிரேசில் எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இழந்த தோல்வியை ரசிகர்கள் மறக்க வாய்ப்பு கிடைக்கும், பிரேசில் வீரர்களும் தலை நிமிர்ந்து நடக்கலாம்.
மஞ்சள் அட்டை பெற்றதால், அரையிறுதி போட்டியில் பங்கேற்க முடியாத பிரேசில் கேப்டன் டி.சில்வா இப்போட்டியில் களம் காண்பது அந்த அணிக்கு பலமாகும். மேலும், சோர்ந்துபோயுள்ள பிரேசில் வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக, காயத்தால் வெளியேறிய, நெய்மரும் மைதானத்திற்கு வருகிறார்.