சாவோ பாலோ: பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே மீண்டும் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
74 வயதாகும் பீலேவுக்கு முதுகெலும்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதுகெலும்பில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாவோ பாலோ நகரில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் பீலே அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் குடும்பத்தினர் வேண்டுகோளின்படி மருத்துவமனை வட்டாரம் எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலையும் தெரிவிக்கவில்லை.
தற்போது பீலே நலமுடன் இருப்பதாகவும், திங்கள்கிழமை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. முதுகெலும்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பீலேவுக்கு காலில் பலம் குறைந்திருக்கிறது. அவரது வலது காலில் முழுமையாக பலம் இல்லை என்று கூறப்படுகிறது.
3 உலகக் கோப்பையை வென்ற ஒரே கால்பந்து வீரர் பீலேதான். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ள ஒரே ஜாம்பவானும் பீலேதான். ஓ ரே என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் பீலே கடந்த 2012ம் ஆண்டு முதல் தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்டு வருகிறார்.
கடந்த மே மாதம் அவர் நான்கு நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவருக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்டிருந்த கல் அகற்றப்பட்டது. அதன் பின்னர் சிறுநீரகத் தொற்று பாதிப்பு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.