கோவா: ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் பயங்கர களேபரம் ஏற்பட்டது. கோவா அணியின் உரிமையாளரை தாக்கியதாக சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியின் கேப்டன் எலானோ ப்ளுமர் அதிரடியாக கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கோவாவில் உள்ள படோர்டாவில் நேற்று இரவு 2-வது ஐ.எஸ்.எல் கால்பந்து திருவிழாவில் இறுதிப்போட்டி நடைபெற்றது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் கோவா அணியை வீழ்த்தி சென்னை சாம்பியன் பட்டம் பெற்றது.

சென்னை அணியின் கேப்டன் எலானோ ப்ளூமர் வெற்றிக் கோப்பையுடன் மைதானத்தை வலம்வந்தார். அதன் பின்னர் கோவா அணியின் உரிமையாளர் தத்தராஜ் சல்கான்கரை தாக்கி அவமதித்தார் என்ற புகாரின் அடிப்படையில் சென்னை கேப்டன் எலானோ ப்ளுமரை கோவா போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மேலும் சாம்பியன் கோப்பையை வழங்க வந்திருந்த கோவா முதல்வர் பர்சேகரும் பரிசுகளை வழங்காமலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார். அவரும் ப்ளூமர் மீதுதான் குற்றம்சாட்டியிருந்தார்.
சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்ற சிறிது நேரத்திலேயே சென்னை அணியின் கேப்டன் ப்ளூமரை கோவா போலீசார் கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. பின்னர் ப்ளூமர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.