பெங்களூரு:இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்சி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்சி வென்றது. இதன் மூலம் இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் தனது நான்காவது வெற்றியை சென்னையின் எப்சி பதிவு செய்துள்ளது.
ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் நான்காவது சீசன் நடந்து வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கூல்' டோணி, நடிகர் அபிஷேக் பச்சனின் சென்னையின் எப்.சி., 2015ல் சாம்பியன் பட்டம் வென்றது,
மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த சீசனில், சென்னையின் எப்.சி., அணி, லீக் சுற்றில் முதல் ஆட்டத்தில் கோவாவிடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
அதற்கடுத்த ஆட்டங்களில், நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி அணியை 3-0 என்ற கோல் கணக்கிலும், புனே சிட்டி அணியை 1-0 என்ற கோல் கணக்கிலும், கோல்கத்தாவின் ஏடிகே அணியை 3-2 என்ற கோல் கணக்கிலும் வென்றது.
தொடர்ந்து 3 ஆட்டங்களில் வெற்றி என்ற நிலையில், மும்பை சிட்டி அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் பெங்களூருவில் நடந்த ஆட்டத்தில் பெங்களூரு எப்சி அணியை 2-1 என்ற கோல் கணக்கி்ல் வென்று, சூப்பர் மச்சான்ஸ் நான்காவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அடுத்ததாக வரும் 22ம் தேதி கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை சந்திக்க உள்ளது.
கோவா அணி 5 போட்டிகளில் 4 வெற்றிகள் பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பெங்களூரு எப்சி மற்றும் சென்னையின் எப்சி அணிகள், தலா 6 போட்டிகளில் நான்கில் வென்று 12 புள்ளிகள் பெற்றுள்ளன. கோல் வித்தியாசத்தில், பெங்களூரு எப்சி இரண்டாவது இடத்தில் உள்ளது.