சாண்டியாகோ : கோபா அமெரிக்கா கால்பந்தில் சாம்பியன் பட்டத்திற்கான இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா-சிலி அணிகள் இன்று மோதுகின்றன
தென்அமெரிக்க கண்டத்தின் கால்பந்து ஜாம்பவான் யார்? என்பதை நிர்ணயிக்கும் போட்டி கோபா அமெரிக்கா தொடர். 44-வது கோபா அமெரிக்கா கால்பந்து திருவிழா கடந்த மாதம் 11-ந்தேதி சிலி நாட்டில் தொடங்கியது.

12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் அர்ஜென்டினாவும், போட்டியை நடத்தும் சிலியும் இறுதிசுற்றுக்குள் நுழைந்தன. முன்னாள் சாம்பியன் பிரேசில் மற்றும் நடப்பு சாம்பியன் உருகுவே அணிகள் கால் இறுதியுடன் கழன்று கொண்டன.
இந்த நிலையில் சாண்டியாகோவில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் கோபாஅமெரிக்கா இறுதி ஆட்டத்தில் மகுடத்திற்காக அர்ஜென்டினாவும், சிலியும் மோதுகின்றன.
கோபா அமெரிக்கா கோப்பையை அர்ஜென்டினா அணி இதுவரை 14 முறை ருசித்துள்ளது. இருப்பினும் இறுதியாக இப்பட்டத்தை வென்று 22 ஆண்டுகள் கடந்து விட்டன. நீண்ட நாள் ஏக்கத்தை தணிக்கும் வேட்கையுடன் அர்ஜென்டினா வீரர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். பட்டத்தை வசப்படுத்தினால், அதிக முறை கோபா அமெரிக்கா கோப்பையை வென்ற உருகுவேயின் (15 முறை) சாதனையை சமன் செய்ய முடியும்.
99 ஆண்டு கால கோபா அமெரிக்கா கால்பந்து வரலாற்றில் சிலி அணிக்கு இதுவரை இந்த மகுடம் கிட்டியதில்லை. 4 முறை இறுதி ஆட்டத்தில் (1955, 1956, 1979 மற்றும் 1987-ம் ஆண்டு) தோற்று இருக்கிறது. எனவே புதிய சரித்திரம் படைக்கும் முனைப்புடன் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் சிலி வரிந்து கட்டி நிற்கப்போகிறது.
போட்டியில் வெற்றி மகுடம் சூடும் அணிக்கு இந்திய மதிப்பில் ரூ.25 கோடியும், 2-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ.19 கோடியும் பரிசுத்தொகையாக கிடைக்கும்.
கோபா அமெரிக்கா கால்பந்து வரலாற்றில் அர்ஜென்டினா அணி சிலியிடம் ஒரு போதும் தோற்றதில்லை. இந்த வகை போட்டியில் இவ்விரு அணிகளும் சந்தித்துள்ள 24 ஆட்டங்களில் 18-ல் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. 6 ஆட்டம் டிராவில் முடிந்தன.
இந்த ஆட்டம் உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணி முதல் பார்க்கமுடியும்.