சென்னை:21வது பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடக்கின்றன. ஜூன் 14ல் துவங்கி, ஜூலை 15 வரை நடக்கும் இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.
2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

ஜெர்மனி அல்லது பிரேசில் இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்படுகின்றன. அதே நேரத்தில் அர்ஜென்டீனா, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் பலம், பலவீனம் குறித்து மைகேல் தமிழ் விரிவாக அலசுகிறது.
நாடு : கொலம்பியா
எச் பிரிவில் ஜப்பான், போலந்து, செனகலுடன் இடம்பெற்றுள்ளது.
லீக் சுற்று ஆட்டங்கள் :
ஜூன் 19ல் ஜப்பான்
ஜூன் 24ல் போலந்து
ஜூன் 28ல் செனகல்
பிபா தரவரிசை : 16
கடந்த உலகக் கோப்பையில் : காலிறுதியில் தோல்வி
உலகக் கோப்பையில் சிறந்த இடம் : 2014ல் காலிறுதி
முக்கிய வீரர்கள் : ஜேம்ஸ் ரோட்ரிகுஸ், ரடாமெல் பால்கோ, டேவின்சன் சாஞ்சஸ், ஜூவான் குவாட்ராடோ.
கோச் : ஜோஸ் பெகர்மான்
உலகக் கோப்பையில் மிகவும் வெறுக்கப்படும் அணியாக கொலம்பியா உள்ளது. 2014 உலகக் கோப்பை காலிறுதியில் கமிலோ ஜூனிகாவாலால், பிரேசிலின் நெய்மர் காயமடைந்ததை யாரும் மறக்க முடியாது.
2017ல் தென்கொரியாவுக்கு எதிராக நடந்த நட்பு போட்டியின்போது, கொலம்பியாவின் எட்வின் கார்டோனா செய்த மோசமான செய்கைகளையும் மறக்க முடியாது.
இந்த உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் பெருவுடன் கொலம்பியா மோதியது. அந்த ஆட்டத்தில் டிரா செய்தாலே இரு அணிகளும் தகுதி பெற்றுவிடும். முதல் கோலை கொலம்பியா அடித்தது. அதன்பிறகு பெரு கோலடித்து சமன் செய்தது. அப்போது, கொலம்பியாவின் ரடாமெல் பால்கோ, மைதானத்தில் உள்ள ஒவ்வொரு பெரு வீரரிடமும் சென்று, இதற்கு மேல் இரு அணிகளும் கோலடிக்காமல் டிராவில் முடிக்கலாம் என்று கூறியுள்ளார்.
இவ்வாறு எதையும் செய்வதற்கு கொலம்பியா அணி தயங்காது. இவ்வாறு மற்ற அணிகளால் வெறுக்கப்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், கடுமையான போராடக் கூடிய அணியாக கொலம்பியா உள்ளது.
2014ல் கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிகுஸ் தனி ஆளாக, அணியை காலிறுதி வரை அழைத்துச் சென்ற ஆட்டத் திறனை மறக்க முடியாது. தற்போது அவருடன் ரடாமெல் பால்கோ ஆகியோரும் சேர்ந்துள்ளனர்.
செனகல் மற்றும் ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தைவிட போலந்துக்கு எதிரான ஆட்டமே கொலம்பியாவுக்கு சவாலாக இருக்கும். அதில் வென்றால், அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கொலம்பியாவுக்கு கண்டிப்பாக கிடைக்கும்.