பெங்களூரு: லா லிகா கிளப் அணியான வெலன்சியா அணியில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதாம்.
அந்த அணியின் மூன்றில் ஒரு பங்குக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா அறிகுறிகள் இருக்கிறதாம். இவர்களில் வீரர்கள் மட்டும் அல்லாமல் சப்போர்ட்டிங் ஊழியர்களும் அடக்கம். இருப்பினும் யாரும் அபாய கட்டத்தில் இல்லை என்பது ஆறுதல்.
வெலன்சியா அணியில் இதுவரை 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அணியைச் சேர்ந்த அர்ஜென்டினா அணியின் எஸக்கியல் கேரே மற்றும் பிரான்சின் எலியாக்கும் மங்களா ஆகியோருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அணியில் உள்ள அனைவருக்கும் கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. பலருக்கு அதில் பாசிட்டிவ் என முடிவு வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மிகக் கடுமையான கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு இருந்தும் கூட தங்களது அணியினருக்கு கொரோனா பாதிப்பு வந்திருப்பது வெலன்சியா நிர்வாகத்தை அதிர வைத்துள்ளது.
பாதிப்புக்குள்ளான அனைவருமே வீடுகளிலும், மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். தீவிர கண்காணிப்பிலும் வைக்கப்பட்டுள்ளனர். வெலன்சியா அணி கடந்த மாதம் மிலன் நகரில் ஐரோப்பிய கால்பந்து கழக போட்டிகளில் விளையாடி வந்தது. அந்த சமயத்தில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளிலேயே இத்தாலியில்தான் வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அங்கு ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே போகிறது. அதேபோல பிரான்சும் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இதனால் ஐரோப்பா முழுவதும் விளையாட்டுப் போட்டிகள், குறிப்பாக கால்பந்துப் போட்டிகள் ரத்தாகி விட்டன.