கிறிஸ்டியானோ ரொனால்டோ ஓய்வு பற்றி சகோதரி வெளியிட்ட முக்கிய தகவல்.. ரசிகர்கள் சோகம்
டொராண்டோ: தற்போது நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக் கோப்பை 2026 கால்பந்து தொடருடன் போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக அவரது சகோதரி காட்டியா அவிரோ தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
டொராண்டோவில் நடைபெற்ற குரோஷியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய காட்டியா அவிரோ, "எனக்குக் கிடைத்த நம்பகமான தகவலின்படி, போர்ச்சுகல் தேசிய அணியுடன் ரொனால்டோ விளையாடும் கடைசி உலகக் கோப்பைத் தொடர் இதுவாகத்தான் இருக்கும். அவர் தேசிய அணியில் இருந்து விடைபெறும் காலம் நெருங்கிவிட்டது. அவர் விளையாடுவதை இன்னும் சில காலம் மட்டுமே நாம் ரசிக்க முடியும். இது தேசிய அணியில் அவரது கடைசிப் பயணமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று கூறினார்.

மேலும், ரொனால்டோ தனது கால்பந்து வாழ்க்கையின் 1,000-வது கோலை அடித்த பிறகு ஒட்டுமொத்தமாக ஓய்வு பெறுவாரா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "நான் அவரது போர்ச்சுகல் தேசிய அணியின் ஓய்வு பற்றி மட்டுமே பேசுகிறேன்" என்று காட்டியா தெளிவுபடுத்தினார்.
குரோஷியாவுக்கு எதிரான விறுவிறுப்பான நாக்கவுட் போட்டியில் பெனால்டி மூலம் ரொனால்டோ கோல் அடிக்க, போர்ச்சுகல் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதி பெற்றது. தற்போது 41 வயதாகும் ரொனால்டோ, போர்ச்சுகல் தேசிய அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடி, அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இவர் போர்ச்சுகல் அணிக்கு 2016 யூரோ கோப்பை மற்றும் 2019 நேஷன்ஸ் லீக் கோப்பையை வென்று தந்துள்ளார்.
தங்களது நட்சத்திர வீரரின் கடைசி உலகக் கோப்பை தொடர் இதுவாக இருக்கலாம் என்பதால், ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி ஸ்பெயினுக்கு எதிராக விளையாடவுள்ள அடுத்த ரவுண்ட் ஆஃப் 16 போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
