FIFA 2026: கிறிஸ்டியானோ ரொனால்டோ ஈகோவை கைவிட வேண்டும்.. இளம் வீரருக்கு வழி விடுங்கள்.. EX வீரர்கள்
அமெரிக்கா: 2026 ஃபீஃபா உலகக் கோப்பைத் தொடரில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அடுத்த போட்டியில் அவரைத் தொடக்க வீரராகக் களம் இறக்காமல் மாற்று வீரராகப் பயன்படுத்த வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கேப்ரியல் அக்போன்லஹோர் தெரிவித்துள்ளார்.
காங்கோக்கு எதிரான ஆட்டத்தில் 75 சதவீதத்திற்கும் அதிகமான நேரம் பந்து போர்ச்சுகல் அணியின் கட்டுப்பாட்டில் இருந்தபோதிலும், ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இப்போட்டியில் 41 வயதான ரொனால்டோ இரண்டு இலக்கு தவறான ஷாட்களை மட்டுமே அடித்ததோடு, வெறும் 25 முறை மட்டுமே பந்தைத் தொட்டு விளையாடினார். இதன் மூலம் சர்வதேசப் பெருந்தொடர்களில் கோல் அடிக்காமல் இருக்கும் அவரது சொதப்பலான சாதனை 10 போட்டிகளாக நீடித்துள்ளது.

உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் ரொனால்டோ களமிறங்குவது குறித்து பேசிய அக்போன்லஹோர், "அவர் தொடக்க வீரராகக் களம் இறங்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. போர்ச்சுகல் அணியையும், அங்குள்ள மற்ற சிறந்த வீரர்களையும் நான் பார்க்கும்போது, ரொனால்டோவுக்கு முன்பாக விளையாடக்கூடிய தகுதியான முன்கள வீரர்கள் பலர் உள்ளனர்.
ஒருவேளை அவரைத் தொடக்க வீரராகப் பயன்படுத்தினாலும், ஆட்டம் சரியாக அமையாத பட்சத்தில் 55 முதல் 60 நிமிடங்களுக்குள் அவரை வெளியில் கொண்டு வர வேண்டும். அவர் பந்தைத் தன் வசம் வைத்துக் கொள்ளாமல், மிகவும் பின்தங்கி வந்து ஒரு நம்பர் 10 வீரரைப் போல விளையாட முயற்சிக்கிறார்" என்று விமர்சித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், "சிஆர்7 தனது சிறந்த ஆட்டத்தை என்றோ கடந்துவிட்டார். ஆனால் இங்கு அவரது அகங்காரம் (Ego) தான் தடையாக இருக்கிறது. மெஸ்ஸி ஏற்கனவே உலகக் கோப்பையை வென்றுவிட்டார், மேலும் இத்தொடரின் தனது முதல் போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தியுள்ளார். தன்னாலும் அதைச் செய்ய முடியும் என்று ரொனால்டோ நினைக்கிறார். தனது அகங்காரத்தைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே போர்ச்சுகல் அணிக்கு உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு கிடைக்கும். மாறாக, அவர் அனைத்துப் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்று அடம் பிடித்தால், போர்ச்சுகல் உலகக் கோப்பையை வெல்வது கடினம்" என்று தெரிவித்தார்.
ராபர்டோ மார்டினெஸ் தலைமையிலான போர்ச்சுகல் அணி, தனது அடுத்த ஆட்டத்தில் உலகக் கோப்பைக்கு முதன்முறையாகத் தகுதி பெற்றுள்ள உஸ்பெகிஸ்தான் அணியை ஜூன் 23, செவ்வாய்க்கிழமை அன்று ஹூஸ்டனில் எதிர்கொள்கிறது. உஸ்பெகிஸ்தான் தனது முதல் போட்டியில் கொலம்பியாவிடம் 3-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
"முக்கியம் அணி கோல் அடிப்பதே, நீங்கள் அல்ல" - தியரி ஹென்றி சாடல்
ரொனால்டோ கோல் அடிப்பதை விட போர்ச்சுகல் அணியாகச் செயல்படுவதே முக்கியம் என்று பிரான்ஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் தியரி ஹென்றி வலியுறுத்தியுள்ளார். காங்கோக்கு எதிரான போட்டியில் ரொனால்டோவின் ஆட்டத்தைக் கடுமையாக விமர்சித்த ஹென்றி, புருனோ பெர்னாண்டஸ் கோல் அடிக்கும் திசையில் ரொனால்டோ குறுக்கிட்டதைச் சுட்டிக் காட்டினார்.
இது குறித்துப் பேசிய ஹென்றி, "தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள், அணி கோல் அடிப்பது தான் முக்கியமே தவிர நீங்கள் தனிப்பட்ட முறையில் கோல் அடிப்பது அல்ல. ரொனால்டோ தானாகவே கோல் அடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதால், சக வீரர்களின் பாஸிங் பாதையில் குறுக்கிடுகிறார். இதனால் எதிரணிக்குத் தடுப்பது எளிதாகிவிடுகிறது.
அவர் பெனால்டி பாக்ஸிற்குள் (six-yard box) நகர்ந்திருந்தால், புருனோ பெர்னாண்டஸுக்கு அது மிக எளிதான கோலாக அமைந்திருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.உலகக் கோப்பை வரலாற்றில் தனது 6-வது தொடரில் விளையாடும் சாதனையைப் படைத்துள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இதுவே கடைசி உலகக் கோப்பையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. தனது நீண்டகாலக் கால்பந்து வரலாற்றில் இதுவரை வெல்ல முடியாத ஒரே முக்கியக் கோப்பையான உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் அவர் களமிறங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications

