மும்பை: கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். 39 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது சவுதி அரேபியா லீக் தொடரில் அல் நசர் அணிக்காக விளையாடி வருகிறார். கால்பந்து வரலாற்றில் 5 முறை பாலன் டிஆர் விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.
சோசியல் மீடியாவில் அதிகளவில் ரசிகர்கள் கொண்டுள்ள விளையாட்டு வீரர்கள் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் முதலிடத்தில் இருக்கிறார். எக்ஸ் தளத்தில் 112.5 மில்லியன் ரசிகர்களும், ஃபேஸ்புக்கில் 170 மில்லியன் ரசிகர்களும், இன்ஸ்டாகிராமில் 636 மில்லியன் ஃபாலோயர்களும் உள்ளனர். ரொனால்டோ பதிவிடும் ஒரு இன்ஸ்டா பதிவுக்கு ரூ.26.7 கோடி வருமானம் ஈட்டி வருகிறார்.
இந்த நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது யூ-டியூப் சேனலை தொடங்கியுள்ளார். இதனை எக்ஸ் தளத்தில் ரொனால்டோ அறிவித்த சில நிமிடங்களிலேயே 2.78 மில்லியன் ரசிகர்கள் யூடியூப் சேனலை சப்ஸ்க்ரைபர்கள் செய்துள்ளனர். இதன்பின் ரொனால்டோ 11 ஷார்ட் வீடியோக்களை வெளியிட்டு ஆச்சரியம் கொடுத்தார். அவை மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுக்கப்பட்ட வீடியோவாக அமைந்துள்ளன.
அதேபோல் இந்த யூடியூப் சேனலில் ரொனால்டோவுக்கு மிகவும் பிடித்த கால்பந்து குறித்து தொடர்ச்சியாக ஆலோசிப்பார் என்று கூறப்படுகிறது. அதேபோல் ரொனால்டோவுக்கு பிடித்த விஷயங்கள், குடும்பம், உடல் ஆரோக்கியம், ஊட்டச்சத்து, கல்வி மற்றும் தொழில் ஆகியவை குறித்தும் பேசவுள்ளார். அதேபோல் ரொனால்டோ தனது சேனலுக்கு சிறப்பு அழைப்பாளர்களையும் அழைத்து ஆலோசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ரொனால்டோ தரப்பில் உர்சு தண்ணீர், எராகுலிஸ் ஃபிட்னஸ் செயலி, சிஆர்7 பிராண்ட் ஆகிய தொழில்களை செய்து வருகிறார். அதேபோல் வாசனை திரவியம், ஆடை விற்பனை, ஷூ விற்பனை உள்ளிட்ட தொழில்களிலும் முதலீடு செய்திருக்கிறார். சவுதி பிரீமியர் லீக் தொடரில் இருந்து மீண்டும் ஐரோப்பா லீக் தொடருக்கு திரும்ப வாய்ப்பில்லை.

இதனால் விரைவில் ரொனால்டோ ஓய்வை அறிவிப்பார் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த யூ-டியூப் சேனல் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ரொனால்டோவின் UR. Cristiano சேனலை சப்ஸ்க்ரைப் செய்தவர்களின் எண்ணிக்கை 4 மில்லியனை எட்டியுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.