போர்ச்சுகலுக்கு பலம் போச்சு.. ரொனால்டோ “அவுட்?
கேம்பினாஸ், பிரேசில்: உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் போர்ச்சுகல் அணிக்கு ஒரு முக்கிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் கேப்டனும், சூப்பர் ஸ்டார் வீர்ருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் முழங்கால் வலியால் அவதிப்படுவதால் தொடர்ந்து ஆட முடியாத நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தப் போட்டித் தொடருக்கு முன்பாகவே முழங்கால் வலியுடன்தான் வந்தார் ரொனால்டோ. போர்ச்சுகலின் முதல் போட்டியான ஜெர்மனியுடனான போட்டியின்போது முழு ஆட்டத்திலும் அவர் ஆடினார். அப்போட்டியில், போர்ச்சுகல் அணி 0-4 என்ற கோல் கணக்கில் படு தோல்வியைச் சந்தித்த்து.

முழங்காலில் ஐஸ் பேக்
இந்த நிலையில் இன்று நடந்த அடுத்த போட்டிக்கான பயிற்சியின்போது பாதியிலேயே ரொனால்டோ வெளியேறி விட்டார். அவரது இடது முழங்காலில் ஐஸ் பேக் வைக்கப்பட்டிருந்த்து.

பாதியில் ரொனால்டோ விலகியதால்
இப்படிப் பயிற்சியிலிருந்து பாதியில் ரொனால்டோ விலகியதால், அவர் தொடர்ந்து ஆட மாட்டார் என்று செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் இதுகுறித்து போர்ச்சுகல் அணி நிர்வாகம் எதையும் உறுதிப்படுத்தவில்லை.

உலகக் கோப்பைக்கு முன்பாகவே
உலகக் கோப்பைக்கு முன்பாகவே, முழங்கால் வலியுடன் ரொனால்டோ விளையாடக் கூடாது. அப்படி விளையாடினால் அவரது எதிர்காலமே கேள்விக்குறியாகி விடும் என்று அவரது டாக்டர் எச்சரித்திருந்ததாக கூறப்படுகிறது. அதை மீறித்தான் வந்திருந்தார் ரொனால்டோ.

3வது உலகக் கோப்பை
இது ரொனால்டோவுக்கு 3வது உலகக் கோப்பையாகும். 2006ல் ஜெர்மனியில் நடந்த போட்டியின்போது போர்ச்சுகல் அணி 4வது இடத்தைப் பிடிக்க ரொனால்டோ உதவியிருந்தார். 2010ல் நடந்த போட்டியில் போர்ச்சுகல் அணி ரவுண்ட் 16 சுற்றோடு வெளியேறியது.

2வது போட்டியில் அமெரிக்காவை
தற்போதைய தொடரில் போர்ச்சுகல் அணி தனது 2வது போட்டியில் ஜூன் 23ம் தேதி அமெரிக்காவை சந்திக்கவுள்ளது. இப்போட்டியில் ரொனால்டோ விளையாடுவாரா என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications