முதல் பாதி ஆட்டம்
போர்ச்சுகல் அணி தொடர்ந்து அட்டாக் செய்தது. ஆனால் கானா அணியின் கட்டுக்கோப்பான டிஃபென்சிவ் ஆட்டம் போர்ச்சுகல் அணியை அசைத்து பார்த்தது. இருப்பினும் 35வது நிமிடத்தில் அனைத்து வீரர்களையும் கடந்து ரொனால்டோ ஒரு கோலை அடித்தார். ஆனால் அந்த கோலை, நடுவர்கள் ஓவர்ரூல் செய்தனர். இதனால் முதல் பாதி ஆட்டம் 0-0 என்று கோல் அடிக்காமல் முடிவுக்கு வந்தது.
ரொனால்டோ சாதனை
இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது முதலே போர்ச்சுகல் - கானா ஆகிய இரு அணிகளும் போல் அடிப்பதிலேயே அதிக முயற்சியை மேற்கொண்டன. இதனிடையே 65வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த பெனால்டியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் கோலை அடித்து அசத்தினார். இதன் மூலம் 5 வெவ்வேறு உலகக்கோப்பைத் தொடர்களில் கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்தார்.
அடுத்தடுத்து கோல்
இதற்கு பதிலடியாக கானா அணியின் ஆண்ட்ரே அயோ 73வது நிமிடத்தில் கோல் அடித்து, ஆட்டத்தில் 1-1 என்ற சமநிலை செய்தார். இதன் பின்னர் போர்ச்சுகல் அணி வீரர்கள் விஸ்வரூபம் எடுத்தனர். 78வது நிமிடத்தில் ஜாவோ ஃபெலிக்ஸ் இரண்டாவது கோலையும், 80வது நிமிடத்தில் ரஃபேல் லியோ மூன்றாவது கோலையும் அடித்து அசத்தினர். இதன் மூலம் 3-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி முன்னிலையில் இருந்தது. இதன்பின்னர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு பதிலாக மாற்று வீரர் களமிறக்கப்பட்டார்.
அதிர்ச்சி கொடுத்த கானா
பின்னர் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட கானா அணிக்கு, 90வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. போர்ச்சுகல் அணியின் தடுப்பாட்டத்தில் செய்த தவறை பயன்படுத்தி கானா அணியின் ஓஸ்மான் புகாரி இரண்டாவது கோலை அடித்தார். இதனால் ஆட்டத்தில் 3-2 என்ற நிலை ஏற்பட்டது. பின்னர் இரண்டாம் பாதி முடிவுக்கு வந்த நிலையில், 9 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது.
போர்ச்சுகல் வெற்றி
கூடுதல் நிமிடங்களில் கானா அணி இன்னொரு கோல் அடித்து சமன் செய்ய தீவிரமாக முயற்சி செய்தது. ஆனால் கானா அணியின் முயற்சியை போர்ச்சுகல் அணி வீரர்களும், கோல் கீப்பரும் சிறப்பாக தடுத்தனர். இறுதியாக போர்ச்சுகல் அணி 3-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் குரூப் எச் பிரிவில் போர்ச்சுகல் அணி முதலிடத்தை பிடித்துள்ளது.