குரேஷியா பெண் அதிபரின் கொண்டாட்டம்... முகம் சுருங்கிய ரஷ்ய பிரதமர்..... ஃபிபாவில் ருசிகரம்!
மாஸ்கோ: ஃபிபா உலகக் கோப்பையில் குரேஷியா அணி காலிறுதியில் வென்று அரை இறுதிக்கு முன்னேறியது. இதை நேரில் பார்த்த குரேஷிய பெண் அதிபர் கோலிண்டா கிராபார் கிடரோவிக் குதூகலத்தில் குதித்தார். ஆனால், ரஷ்ய பிரதமருக்கு முகம் சுருங்கிவிட்டது. இந்த வீடியோதான் தற்போது ஃபிபா உலகக் கோப்பை வீடியோக்களில் டாப் ரேட்டில் உள்ளது.
ரஷ்யாவில் நடக்கும் 21வது ஃபிபா உலகக் கோப்பை போட்டியின் அரை இறுதி ஆட்டங்கள் நாளை துவங்குகின்றன. நேற்று முன்தினம் நடந்த காலிறுதியில் ரஷ்யாவும், குரேஷியாவும் மோதின.
இந்த ஆட்டத்தைப் பார்ப்பதற்காக குரேஷியா பெண் அதிபர் கோலிண்டா கிராபார் கிடரோவிக் மைதானத்துக்கு வந்திருந்தார். ஃபிபா தலைவர் கியானி இன்பான்டினோ, ரஷ்ய பிரதமர் டிமித்ரி மேட்வடேவ் ஆகியோருடன் அமர்ந்து அவர் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் தலா 2 கோல்களை அடித்தன. ஒவ்வொரு கோலின்போதும், ரஷ்ய பிரதமர் மற்றும் குரேஷியா அதிபர் பரஸ்பரம் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

குதித்து கொண்டாட்டம்
ஆட்டம் சமநிலையில் முடிந்ததால், பெனால்டி ஷூட்அவுட் கொடுக்கப்பட்டது. அதில் 4-3 என குரேஷியா வென்றது. அப்போது, கைதட்டி, குதூகலத்தில் குதித்தார் குரேஷியா அதிபர். அதே நேரத்தில் தோல்வியடைந்த சோகத்தில், ரஷ்ய பிரதமர் முகம் சுருங்கி போய், முகத்தை வேறுபக்கமாக திருப்பி கொண்டார்.
ரசிகரான அதிபர்
இந்த வீடியோதான் தற்போது வைரலாக பரவி கொண்டிருக்கிறது. ஒரு நாட்டின் அதிபர் என்றபோதும், தங்களுடைய அணியின் வெற்றியை ஒரு ரசிகையாக அவர் கொண்டாடியது பாராட்டுகளை குவித்து வருகிறது.
வீரர்களுடன் கொண்டாட்டம்
இதைத் தவிர போட்டி முடிந்த உடன், வீரர்கள் இருக்கும் அறைக்குச் சென்று, வீரர்களுடன், வெற்றியைக் கொண்டாடினார் குரேஷியா அதிபர் கோலிண்டா.

இதுதான் உலகக் கோப்பை
இந்த உலகக் கோப்பையில் பல ஜாம்பவான்கள் வெளியேறிய நிலையில், 1998க்குப் பிறகு அரை இறுதிக்கு நுழைந்துள்ளது குரேஷியா. உலகெங்கும் கால்பந்துக்கு அதிக ரசிகர்கள் இருப்பதற்கு காரணம், யாருக்கு எப்போது வெற்றி கிடைக்கும் என்பதை யூகிக்க முடியாததுதான். நாட்டின் அதிபராக இருந்தாலும், அவர்களையும் ரசிகர்களாக்கியது இந்த உலகக் கோப்பை.


Click it and Unblock the Notifications