டெல்லி: பிபா உலகக் கோப்பை போட்டியில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் முக்கியமான வீரர்களில் அர்ஜென்டீனாவின் லியோனல் மெஸ்ஸியும் ஒருவர்.
பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் வரும் 14ம் தேதி துவங்கி அடுத்த மாதம் 15ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜெர்மனி அல்லது பிரேசில் இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்படுகின்றன. அதே நேரத்தில் அர்ஜென்டீனா, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.
இதில் அர்ஜென்டீனா அணி மீது தனி எதிர்பார்ப்பு உள்ளதற்கு முக்கிய காரணம், அதன் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி. டி பிரிவில் அர்ஜென்டீனா, ஐஸ்லாந்து, குரேஷியா, நைஜீரியா ஆகிய அணிகள் உள்ளன.
கடந்த உலகக் கோப்பை பைனலில் விளையாடிய மெஸ்ஸி கேப்டனாக உள்ள அர்ஜென்டீனா அணி, சமீபகாலத்தில் எந்த சர்வதேசப் போட்டிகளிலும் கோப்பையை வெல்லவில்லை. 2014 உலகக் கோப்பை, அதைத் தொடர்ந்து கோபா அமெரிக்காவில் 2015 மற்றும் 2016ல் பைனலில் தோல்வியடைந்தது. அதே நேரத்தில் மெஸ்ஸி கேப்டனாக உள்ள பார்சிலோனா அணி இந்த ஆண்டு லா லிகா மற்ரும் கோபா டெல் ரெ பட்டங்களை வென்றது.
பார்சிலோனா அணியில் மெஸ்ஸியுடன் விளையாடும் இவான் ராகிடிக், உலகக் கோப்பையில் குரேஷியா அணிக்காக விளையாட உள்ளார். இரண்டு நாடுகளும் டி பிரிவில் இடம்பெற்றுள்ளன.
இருவரும் ஒன்றாக விளையாடியுள்ளோம். தற்போது எதிரெதிர் அணிகளில் விளையாட உள்ளோம். இது புதிய அனுபவமாக உள்ளது. மெஸ்ஸி மிகவும் திறமைசாலி. அவர் இந்த நேரம் டென்னிஸ் விளையாடியிருந்தால், 50 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றிருப்பார். அவருடைய திறமையை இந்த உலகக் கோப்பையில் பார்க்கலாம் என்று ராகிடிக் கூறியுள்ளார்.