சாரன்ஸ்க்: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் சி பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் டென்மார்க் 1-0 என பெருவை வென்றது.
21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. சி பிரிவில் நடக்கும் முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் 2-1 என ஆஸ்திரேலியாவை வென்றது. இந்தப் பிரிவின் இரண்டாவது ஆட்டத்தில் பெரு, டென்மார்க் விளையாடின.

இந்த உலகக் கோப்பை பெரு கேப்டன் பாவ்லோ குரேரோவுக்கு மறக்க முடியாத ஒன்றாகும். உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தின்போது தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் எடுத்துக் கொண்டதாக தடை விதிக்கப்பட்டார். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தடை நீங்கி இந்த உலகக் கோப்பையில் அவர் பங்கேற்கிறார்.
உலகக் கோப்பையில் பங்கேற்கும் மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போல, மிகப் பெரிய வெற்றி வரலாறோ, உலகப் புகழ்பெற்ற வீரர்களோ டென்மார்க் அணியில் இல்லை. 1998ல் காலிறுதியை எட்டிய அந்த அணி 2010ல் பிரிவு சுற்றிலேயே வெளியேறியது. அதே நேரத்தில் கடந்த ஆண்டு பல்வேறு முக்கிய போட்டிகளில் டென்மார்க் அசத்தியுள்ளது.
இந்த உலகக் கோப்பையில் சி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியை வென்றது. இன்று நடந்த இரண்டாவது ஆட்டத்தில் டென்மார்க் 1-0 என பெருவை வென்றது. கடைசியாக 2010ல் கேமரூனுக்கு எதிராக 2-1 என டென்மார்க் வென்றது. இதுவரை உலகக் கோப்பையில் 16 ஆட்டங்களில் 8ல் வென்றுள்ளது. 2ல் டிரா, 6ல் தோல்வி அடைந்தது.
இன்றைய ஆட்டத்தின் துவக்கம் முதல் கடைசி வரை பெரு அணியே ஆதிக்கம் செலுத்தியது. கிட்டத்தட்ட 54 சதவீத நேரம் பந்து அந்த அணியிடமே இருந்தது. 17 முறை கோலடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில், 6 முறை கோல் பகுதிக்குள் சென்றது.
இருப்பினும் டென்மார்க் அணியின் தடுப்பாட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக கோல்களை தராமல் சிறந்த முறையில் தடுக்கப்பட்டது.
ஆட்டத்தில் 59வது நிமிடத்தில் டென்மார்க்கின் போல்சென் ஆட்டத்தின் ஒரே கோலை அடித்தார்.
இரண்டு அணிகளுமே மிகவும் பலம் வாய்ந்த அணிகளாக இல்லாத நிலையிலும், மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தின. அடுத்து பிரான்ஸ் அணிக்கு எதிராக மிகவும் தெம்புடன் பெரு போட்டியிட, இன்றைய ஆட்டம் அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும்.
அதேபோல் அடுத்து ஆஸ்திரேலியாவை வென்றால், இரண்டாவது சுற்றுக்கு முன்னேற டென்மார்க் அணிக்கு வாய்ப்பு கிடைக்கும். அதற்கான வாய்ப்பும் உள்ளது.