பெல்லிங்ஹாம் டபுள் கோல்.. ஏமாற்றம் அடைந்த நார்வே.. அரை இறுதிக்கு சென்ற இங்கிலாந்து
மியாமி: உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டத்தில் நார்வே அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இங்கிலாந்து அணி அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் அடித்த இரட்டை கோல்கள் அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தன.
அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணிகளும் ஆரம்பம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. போட்டியின் முதல் பாதியில் நார்வே அணியின் ஆண்ட்ரியாஸ் ஷெல்டெரப் ஒரு அபாரமான கோல் அடித்து தனது அணிக்கு 1-0 என முன்னிலை தேடித்தந்தார்.

ஆனால், நார்வேயின் இந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. முதல் பாதியின் இறுதி கட்டத்தில் ஆண்டனி கார்டன் கொடுத்த பந்தை இங்கிலாந்தின் ஜூட் பெல்லிங்ஹாம் மின்னல் வேகத்தில் கோலாக மாற்றி ஆட்டத்தை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தார். இந்த கோல் அடித்த போது பந்து காற்றில் திசை மாறியதால் கேமரா கேபிளில் பட்டு இருப்பதாக சர்ச்சை எழுந்தது. எனினும், நடுவர்கள் அதை மறுத்தனர்.அதனால் இங்கிலாந்து அணியின் கோல் உறுதியானது.
நார்வே அணியின் முன்னணி வீரர் எர்லிங் ஹாலண்டை இங்கிலாந்து டிஃபெண்டர்களான மார்க் குஹி மற்றும் ஜான் ஸ்டோன்ஸ் ஆகியோர் மிகச் சிறப்பாகக் கட்டுப்படுத்தினர். இதனால் கடந்த 636 நாட்களில் நார்வே அணிக்காக விளையாடிய போட்டிகளில் முதன்முறையாக ஹாலண்ட் கோல் எதுவும் அடிக்க முடியாமல் போனது. நார்வேயின் டொர்ப்ஜோர்ன் ஹெக்கோம் அடித்த ஒரு கோலை விஏஆர் தொழில்நுட்பம் மூலம் நடுவர் ரத்து செய்தார்.
போட்டியின் இரண்டாவது பாதியில் நார்வே கோல்கீப்பர் நைலாண்ட் செய்த தவறைப் பயன்படுத்தி, பெல்லிங்ஹாம் தனது 2வது கோலை அடித்து இங்கிலாந்தின் வெற்றியை 2-1 என உறுதி செய்தார். இதன் மூலம் 24 வயதிற்குள் உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த பிரேசில் ஜாம்பவான் பீலேயின் சாதனையை பெல்லிங்ஹாம் சமன் செய்துள்ளார்.
தாமஸ் துஹெல் தலைமையிலான இங்கிலாந்து அணி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது. அடுத்ததாக அரை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா - சுவிட்சர்லாந்து போட்டியின் வெற்றியாளரை இங்கிலாந்து எதிர்கொள்ள உள்ளது.


Click it and Unblock the Notifications
