பிரீமியர் லீக் தொடரின் முக்கியமான போட்டியில் எவர்டன் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி அணி அபார வெற்றியை பெற்றுள்ளது.
2023-24ஆம் ஆண்டுக்கான பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நட்சத்திர அணிகளான லிவர்பூல் 54 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதேபோல் ஆர்சனல் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. 3வது இடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி உள்ளது. முதல் 3 அணிகளுக்கு இடையே புள்ளிகள் வித்தியாசம் குறைவாக இருப்பதால், ஒவ்வொரு போட்டியும் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் எவர்டன் அணியை எதிர்த்து மான்செஸ்டர் சிட்டி அணி களமிறங்கியது. இந்த போட்டியிலாவது நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் கோல் அடிப்பாரா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் கடந்த ஆண்டு உச்சக்கட்ட ஃபார்மில் இருந்த ஹாலண்ட், நவம்பருக்கு பின் இதுவரை ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இந்த நிலையில் மான்செஸ்டர் சிட்டி அணி தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக விளையாடியது.

ஆனாலும் முதல் பாதி ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி எவ்வளவு முயற்சித்தும் எந்த கோலையும் அடிக்க முடியவில்லை. ஹாலண்ட் களத்தில் இருந்தாலும், எவர்டன் டிஃபெண்டர்கள் மான்செஸ்டர் சிட்டி அணியை சிறப்பாக தடுத்தனர். இதையடுத்து மேனேஜர் பெப் கார்டியாலோ நட்சத்திர வீரர்களான டி ப்ரூன் மற்றும் கைல் வாக்கர் இருவரையும் களமிறக்கினார். இதனால் ஆட்டம் பரபரப்பாகியது. இதையடுத்து ஹாலண்டால் எளிதாக பாக்ஸ் வரை பந்தை கொண்டு செல்ல முடிந்தது.
இதன்பின் 71வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் ஹாலண்ட் முதல் கோலை அடித்து மரண மாஸ் கம்பேக்கை நிகழ்த்தினார். இதையடுத்து ஆட்டம் இறுதி கட்டத்தை எட்ட மீண்டும் 85வது நிமிடத்தில் அசாத்தியமான கோலை மீண்டும் ஹாலண்ட் அடித்தார். இதன் மூலம் மான்செஸ்டர் சிட்டி அணி ஆட்ட நேர முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இதன் மூலம் அனைத்து லீக் போட்டிகளையும் சேர்த்து மான்செஸ்டர் சிட்டி அணி தொடர்ச்சியாக 10வது வெற்றியை பெற்றது. அதேபோல் பிரீமியர் லீக் புள்ளிப் பட்டியலிலும் 2வது இடத்திற்கு முன்னேறியது மான்செஸ்டர் சிட்டி அணி.