டார்ட்மன்ட்: 2024 யூரோ கோப்பை கால்பந்து தொடரின் குரூப் சுற்றில் இத்தாலி மற்றும் அல்பேனியா அணிகளுக்கு இடையேயான போட்டியில் வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்த போட்டி தொடங்கிய 23 வினாடிகளில் அல்பேனியா அணி முதல் கோலை அடித்தது. அதன் மூலம் யூரோ கோப்பை வரலாற்றில் அதிவேகமாக அடிக்கப்பட்ட கோல் என்ற சாதனை செய்தது அல்பேனியா.
முன்னதாக 2004இல் கிரீஸ் அணிக்கு எதிராக ரஷ்யாவின் டிமிட்ரி கிரிசெங்கோ 67 வினாடிகளில் கோல் அடித்து இருந்ததே அதிவேக கோல் சாதனையாக இருந்தது. அந்தப் பின்னடைவிலிருந்து மீண்ட இத்தாலி அணி அடுத்த சில நிமிடங்களில் இரண்டு கோல் அடித்து முன்னிலை பெற்று போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது.

இந்த போட்டி துவங்கிய சில வினாடிகளில் அல்பேனியாவின் நெதிம் பஜ்ராமி சாமர்த்தியமாக செயல்பட்டு பந்தை தன்வசப்படுத்தி 23 வது வினாடியில் முதல் கோலை அடித்தார். அதனால், இத்தாலி அதிர்ச்சி அடைந்தது. எனினும், அல்பேனியாவை முந்த வேண்டும் என்ற உத்வேகத்தில் 11 வது நிமிடத்தில் அந்த அணியின் அலெஸான்ட்ரோ பஸ்தோனி கோல் அடித்து போட்டியை சம நிலைக்கு கொண்டு வந்தார்.
அடுத்த ஐந்து நிமிடங்களிலேயே இத்தாலி அணியின் நிக்கோலோ பாரெல்லா மற்றும் ஒரு கோல் அடித்தார். இதை அடுத்து 16 நிமிடங்களிலேயே இத்தாலி 2 - 1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து அந்த முன்னிலையை தக்கவைத்த இத்தாலி கடைசி வரை அல்பேனியா அணியை கோல் அடிக்க விடவில்லை. சிறப்பாக தற்காப்பு ஆட்டம் ஆடி போட்டியை தன்வசமாக்கியது இத்தாலி.
இத்தாலி அணியின் மூத்த வீரர்கள் பலர் காயத்தால் யூரோ கோப்பை தொடரில் இடம்பெறாத நிலையில் இளம் வீரர்கள் கொண்ட அணியை வைத்து அந்த அணியின் பயிற்சியாளர் லூசியானோ ஸ்பாலெட்டி சிறப்பாக வழி நடத்தினார். இத்தாலி அடுத்து ஸ்பெயின் அணியை சந்திக்க உள்ளது. அல்பேனியா அடுத்து குரோஷியா அணியை சந்திக்க உள்ளது.