முனிச்: 2024 யூரோ கோப்பை தொடரில் முக்கிய அணிகளான ஸ்பெயின் மற்றும் இத்தாலி அணிகளுக்கு இடையேயான குரூப் பி பிரிவு போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இரண்டு அணிகளும் சரி சமமாக மோதின.
இத்தாலி வீரர் ரிக்கார்டியோ காலாஃபியோரி 55 ஆவது நிமிடத்தில் தங்கள் அணியின் கோல் போஸ்டிலேயே கோல் அடித்தார். அதாவது தவறுதலாக ஸ்பெயின் அணி சார்பாக கோல் அடித்தார். அதனால், ஸ்பெயின் அணி 1 - 0 என முன்னிலை பெற்றது.

அதன் பின் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆட்ட நேரம் முடிந்து ஆறு நிமிடங்கள் வரை கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. அப்போதும் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இத்தாலி அணி வீரர்கள் பலமுறை கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபடும் ஸ்பெயின் வீரர்களின் தற்காப்பு அபாரமாக இருந்ததால் அவர்களால் கோல் போஸ்ட்டை நெருங்க முடியவில்லை.
இதை அடுத்து ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்றது. யூரோ கோப்பை வரலாற்றில் முதன்முறையாக இத்தாலி வீரர் ஒருவர் தனது அணிக்கு எதிராக கோல் அடித்து இருக்கிறார். இந்த போட்டியின் வெற்றியின் மூலம் 2020 எலிமினேஷன் போட்டியில் இத்தாலி அணியால் தோல்வி அடைந்து வெளியேறிய ஸ்பெயின், அதற்கு பழி தீர்த்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் ஸ்பெயின் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. தற்போது குரூப் பி பிரிவில் ஸ்பெயின் 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகள் உடன் முதல் இடத்தில் உள்ளது. இத்தாலி அணி இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி மட்டும் பெற்று மூன்று புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இத்தாலி இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.