
அட்லஸ் லயன்ஸ்
கால்பந்து உலகின் அசைக்க முடியாத பலமிக்க அணிகளான உள்ள பெல்ஜியம், ஸ்பெயின், போர்ச்சுகல் உள்ளிட்ட அணிகளுக்கு எதிராக ஒரு கோல் கூட வாங்காமல், வெற்றிபெறுவது எல்லாம் கற்பனையில் கூட நடக்காது. ஆனால் அட்லஸ் சிங்கங்களின் கர்ஜனையில் அனைத்து அணிகளும் மிரண்டு வெளியேறி இருக்கின்றன.

மொராக்கோ ஆட்டம்
பிரான்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் கூட மொராக்கோ சிங்கங்களின் ஆட்டம் சிறப்பாகவே இருந்தது. இன்னும் சொல்லப்போனால் முதல் பாதியில் 30 நிமிடங்களுக்கு பின்னரும், இரண்டாம் பாதியில் 75வது நிமிடம் வரையிலும் மொராக்கோ அணியினரின் செயல்பாடுகள் பிரான்ஸ் ரசிகர்களுக்கு கிலியை உண்டாக்கி இருக்கும்.

ரசிகர்களின் நம்பிக்கை
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய அணி என்ற வரலாற்றுடன் களமிறங்கிய மொராக்கோ அணி, தங்களது ரசிகர்களுக்கு நடப்பு சாம்பியனையும் வீழ்த்தி காட்டுவோம் என்று நம்பிக்கை கொடுத்தது தான் மிகப்பெரிய சாதனை. ஏதோ அதிர்ஷ்டத்தால் மொராக்கோ அணி அரையிறுதிக்கு வரவில்லை என்பதற்கு அந்த அணியின் ரசிகர்கள் வடித்த கண்ணீரே சாட்சி.

90 நிமிடங்கள்
ஒவ்வொரு கால்பந்து அணிக்கும் ரசிகர்களிடையே நம்பிக்கை, ஆதரவை பெறுவதற்கு 90 நிமிடங்கள் வழங்கப்படும். அந்த 90 நிமிடங்களில் ஒவ்வொரு அணியும் களத்தில் என்ன வகையான ஆட்டட்தை வெளிப்படுத்துகிறார்களோ, அதற்கேற்ப தான் வீரர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மரியாதை கிடைக்கும். அந்த வகையில், மொராக்கோ அணி வீரர்களுக்கு வானளாவிய மரியாதை உலகம் முழுவதும் ரசிகர்கள் வழங்கி வருகிறார்.

சாமானியர்களுக்கு உத்வேகம்
ஃபிஃபா உலகக்கோப்பையை அர்ஜென்டினா, பிரான்ஸ் அணி வெல்லலாம். ஆனால் உலகக்கோப்பை ரசிகர்களின் மனங்களை மொராக்கோ சிங்கங்கள் ஒட்டுமொத்தமாக வென்றுள்ளார்கள். பெரிய அளவிலான பணம், பதவி, மைதானம், கட்டமைப்புகள் என எதுவும் இல்லாமல் திறமையை மட்டும் நம்பினால் போதும், அசாத்திய வெற்றிகளை பெறலாம் என்ற நம்பிக்கையை மொராக்கோ அணி சாமானிய மக்களிடம் விதைத்துள்ளது.

காத்திருக்கும் மொராக்கோ மக்கள்
இனி வரும் ஒவ்வொரு உலகக்கோப்பைத் தொடர்களிலும் எந்தவொரு ஆப்பிரிக்கா அணியையும் ரசிகர்கள் சாதாரணமாக பார்க்க மாட்டார்கள். சாமானிய மக்களுக்கு உத்வேகம் அளிப்பது தான் ஒவ்வொரு விளையாட்டின் மிக முக்கிய வேலை. அதனை கால்பந்து விளையாட்டின் மூலம் மொராக்கோ சாதித்து காட்டியுள்ளது. கால்பந்தில் பெரிய கட்டமைப்புகள் இல்லாத ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகளுக்கு மொராக்கொ நம்பிக்கையை விதைத்துள்ளது. உத்வேகம் கொடுத்த சிங்கங்களை கொண்டாட்டத்துடன் வரவேற்க மொராக்கோ மக்கள் காத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications

