கோல்டன் பூட் விருதை வெல்லப்போவது யார்? முட்டிமோதும் மெஸ்ஸி, எம்பாப்பே.. எகிறும் எதிர்பார்ப்பு!
தோஹா: ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரில் அதிக கோல்கள் அடிக்கும் வீரருக்கு வழங்கப்படும் கோல்டன் பூட் விருதை யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு பிரான்ஸ், அர்ஜென்டினா, குரோஷியா மற்றும் மொராக்கோ ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன.
நாளை முதல் அரையிறுதி போட்டிகள் நடக்கவுள்ளது. இதில் அர்ஜென்டினா அணியை எதிர்த்து குரோஷியா அணியும், நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியை எதிர்த்து மொராக்கோ அணியும் விளையாட உள்ளன.

அர்ஜென்டினா கனவு பலிக்குமா?
இதில் பிரேசிலுக்கு பின் தொடர்ந்து இரண்டாவது உலகக்கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை படைக்க பிரான்ஸ் அணி மும்முரமாக உள்ளது. அதேபோல் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியின் கடைசி உலகக்கோப்பை என்பதால், அவரை உலகக்கோப்பையுடன் வழியனுப்ப வேண்டும் என்று அர்ஜென்டினா வீரர்கள் தீவிரமாக உள்ளனர்.

மொராக்கோ சாதிக்குமா?
மறுபக்கம் 2018ம் ஆண்டு மிஸ் செய்ததை, இம்முறை வெல்ல என்று முனைப்புடன் குரோஷியாவும், முதல்முறையாக உலகக்கோப்பையை வென்ற ஆப்பிரிக்கா அணி என்ற வரலாற்றை உருவாக்க மொராக்கோ அணியும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. இதனால் உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

கோல்டன் பூட் ரேஸ்
அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடரில் அதிக கோல் அடித்த வீரருக்கு வழங்கப்படும் கோல்டன் பூட் விருதிற்கான பந்தயமும் சூடுபிடித்துள்ளது. இதில் பிரான்ஸ் அணியின் 23 வயதாகும் நட்சத்திர வீரர் எம்பாப்பே ஐந்து கோல்களுடன் முதல் இடத்தில் உள்ளார். லீக் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒரு கோலும், டென்மார்க் அணிக்கு எதிராக இரண்டு கோலும் அடித்து அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தார்.

2வது இடத்தில் மெஸ்ஸி
அதேபோல் காலிறுதிக்கு முந்திய சுற்றில் போலந்து அணிக்கு எதிராக இவர் அடித்த இரண்டு கோல் அணியை காலிறுதிக்கு முன்னேற முக்கிய காரணமாக அமைந்தது. ஐந்து கோல்களும் ஃபீல்ட் கோல் என்பது கூடுதல் சிறப்பாகும். அதுமட்டுமல்லாமல் 3 அசிஸ்ட்களும் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி நான்கு கோல்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் இரண்டு பெனால்டி, இரண்டு ஃபீல்ட் கோல் அடித்துள்ளார்.

யாருக்கு அதிக வாய்ப்பு?
அதேபோல் பிரான்ஸ் அணியின் ஆலிவர் ஜீரூட் நான்கு கோல்கள் அடித்து மெஸ்ஸியுடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்துள்ளார். இவர்கள் மூவரும் அரையிறுதி போட்டிகளில் விளையாட உள்ளனர். அதில் வெற்றிபெறுவோர் இறுதி போட்டியில் விளையாட உள்ளனர். இதனால் உலகக்கோப்பைத் தொடரில் கோல்டன் பூட் விருதை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications