பழிதீர்த்தது நெதர்லாந்து: நடப்பு சாம்பியன் ஸ்பெயின் அதிர்ச்சி தோல்வி
ரியோடி ஜெனிரோ: கடந்த உலக கோப்பை பைனலில் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்ட நெதர்லாந்து, நடப்பு சாம்பியன் ஸ்பெயின் அணியை 5க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் மண்ணை கவ்வ வைத்தது.
உலக கோப்பை கால்பந்தாட்டத்தில் நேற்று மூன்று போட்டிகள் நடந்தன. 2வதாக நடந்த போட்டியில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டிதான் ரசிகர்களால் வெகுவாக எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
இதற்கு காரணம் கடந்த உலக கோப்பையில் இவ்விரு அணிகளும்தான் இறுதி போட்டியில் மோதின.

முதலில் போணி செய்த ஸ்பெயின்
போட்டியின் துவக்கத்தில் இரு அணிகளும் வரிந்து கட்டிக்கொண்டு மோதியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. 27வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின், எக்சபி அலோன்சோ பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கோல் போட்டார்.

ரசிகர்கள் ஆரவாரம்
நடப்பு சாம்பியன் ஸ்பெயின் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னணி பெற்றதும் அந்த நாட்டு ரசிகர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இம்முறையும் தங்கள் அணி கோப்பையை தூக்கி போஸ் கொடுக்கும் என்று நினைத்து ஆனந்த கூத்தாடினர்.

அடுத்தடுத்து அடி
இந்நிலையில்தான் ஸ்பெயினுக்கு அடுத்தடுத்து அடிகள் காத்திருந்தன. நெதர்லாந்தின் ரோபின் வான் பெர்சி ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் ஒரு கோல் போட்டு ஸ்பெயினுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

ஆட்டத்தை வசப்படுத்திய நெதர்லாந்து
அதன்பிறகு ஆட்டம் முழுக்கவே நெதர்லாந்துவசம் வந்தது. ஆட்டத்தின் 53வது மற்றும் 80வது நிமிடங்களில் அர்ஜென் ரொப்பன் அடுத்தடுத்து கோல்களை தட்டிவிட நெதர்லாந்து முன்னணி பெற்றது. ஸ்பெயின் ரசிகர்கள் முகத்தில் ஈயாடவில்லை.

அடுத்தடுத்து ஐந்து கோல்கள்
ஆட்டத்தின் 65வது நிமிடத்தில், ஸ்டீபன் டி வ்ரிஜே மற்றும் 72வது நிமிடத்தில் மீண்டும் ரோபின் வான் பெர்சி கோல்களை தட்டிவிட 5 கோல்களை போட்ட கம்பீரத்தில் நெதர்லாந்து எழுச்சி பெற்றது.

பழி தீர்ப்பு
ஆட்ட நேர முடிவில் ஸ்பெயின் ஒரே கோலுடன் இருந்தது. நெதர்லாந்து ஐந்து கோல்களை அடித்து ஐந்துக்கு ஒன்று என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், 2010 உலக கோப்பை இறுதி போட்டியில் ஓன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் பெற்ற தோல்விக்கு நெதர்லாந்து இந்த உலக கோப்பையின் முதல் ஆட்டத்தில் பழி தீர்த்துக்கொண்டது.

பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை
"நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்பினோம், ஆனால் இவ்வளவு பெரிய வெற்றியை பெறுவோம் என்று நினைத்து பார்க்கவில்லை" என்று போட்டிக்கு பிறகு நெதர்லாந்து கோச் லூயிஸ் வான் கால் நெகிழ்ந்து தெரிவித்தார்.

வரலாறு காணாத தோல்வி
உலக கோப்பை போட்டியொன்றில் ஸ்பெயினுக்கு எதிராக ஐந்து கோல்கள் போடப்பட்ட நிகழ்வு அரிதானது. முதல் முறையாக 1963-ல் 6-2 என்ற கணக்கில் ஸ்காட்லாந்திடம் தோற்றது.
அதன்பிறகு ஸ்பெயினுக்கு எதிராக உலக கோப்பையில் எந்த நாடும் 5 மற்றும் அதற்கு மேல் கோல்போட்டதில்லை. மேலும் நடப்பு சாம்பியன் அணி ஒன்று உலக கோப்பை போட்டியில் இப்படி மோசமான துவக்கம் கண்டதும் இதுதான் முதல் முறையாகும்.


Click it and Unblock the Notifications