டெல்லி:உலக கால்பந்து கூட்டமைப்பான ஃபிபாவின் சார்பில் வழங்கப்படும் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதுக்கு, மெஸ்ஸி, ரொனால்டோ உள்பட 10 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பிரேசிலின் நெய்மர் மட்டும் அதில் இல்லை.
உலக கால்பந்து கூட்டமைப்பான ஃபிபாவின் சார்பில் சிறந்த வீரருக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன. இதைத் தவிர பிரான்ஸ் நாட்டின் சார்பில் தங்கக் கால்பந்து எனப்படும் பாலோன் டியோர் வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் ஏற்பட்ட சமரசத்தை அடுத்து 2010 முதல் 2015 வரை ஃபிபா பாலோன் டியோர் என்று ஒரே பெயரில் விருது வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் பிரான்ஸ் மீண்டும் பாலோன் டியோர் விருதை 2016 முதல் வழங்கி வருகிறது. அதையடுத்து ஃபிபாவின் சார்பில் மீண்டும் சிறந்த வீரருக்கான விருது வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக போர்ச்சுகல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோவே இந்த விருதை வென்றார்.
இந்த ஆண்டுக்கான விருது செப்டம்பர் 24ம் தேதி லண்டனில் நடக்கும் விழாவில் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில், இந்த விருதைப் பெறும் வாய்ப்பு உள்ள, தகுதியுள்ள 10 பேர் கொண்ட பரிந்துரை பட்டியலை ஃபிபா வெளியிட்டுள்ளது.
அதில் ஃபிபா உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியின் கிலியான் மாப்பே, ஆன்டோனி கிரீஸ்மான், ரபேல் வரானே இடம்பெற்றுள்ளனர். வழக்கம்போல் போர்ச்சுகல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினாவின் லியோனஸ் மெஸ்ஸி இந்தப் பட்டியலில் உள்ளனர். குரேஷியாவை பைனல் வரை அழைத்துச் சென்ற அந்த அணியின் கேப்டன் லூகா மோட்ரிக்கும் 10 பேர் பட்டியலில் உள்ளார்.
பெல்ஜியம் அணியின் ஈடன் ஹசார்ட், கெவின் டி புருனே, இங்கிலாந்தின் ஹாரி கேன், எகிப்தின் மொகம்மது சலா ஆகியோர் இந்தப் பட்டியலில் உள்ளனர். அதே நேரத்தில் பிரேசிலின் நெய்மர் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. அதேபோல் சிறந்த வீராங்கனை, சிறந்த கோச்களுக்கான விருதுக்கான பரிந்துரைகளையும் ஃபிபா வெளியிட்டுள்ளது.