வாஷிங்டன்: 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான குலுக்கல் விழா அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்றது. கால்பந்து அணிகளின் மோதல்கள் அறிவிக்கப்பட்ட இந்த விழாவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு ஃபிஃபா நிறுவனம் "அமைதி விருது" வழங்கி கௌரவித்துள்ளது.
விளையாட்டுத் துறையில் மட்டும் கவனம் செலுத்தி வந்த ஃபிஃபா, முதல்முறையாக அரசியல் தலைவருக்கு இப்படி ஒரு விருதை வழங்கியிருப்பது உலக அரங்கில் பேசுபொருளாகியுள்ளது. இது விமர்சனத்துக்கும் உள்ளாகி இருக்கிறது.

ஃபிஃபா அமைப்பு புதிதாக உருவாக்கியுள்ள இந்த அமைதி விருதின் முதல் வெற்றியாளராக டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ இந்த விருதை ட்ரம்ப்புக்கு வழங்கினார். ட்ரம்ப்புக்கு ஒரு பதக்கமும், உலகம் கைகளில் தாங்கப்பட்டிருப்பது போன்ற ஒரு தங்கக் கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது.
விருது வழங்கிய ஃபிஃபா தலைவர் இன்ஃபான்டினோ பேசுகையில், "உலகில் அமைதியையும் ஒற்றுமையையும் ஊக்குவித்ததற்காக அதிபர் ட்ரம்ப்புக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. காசா போர் நிறுத்தத்தைக் கொண்டுவர அவர் எடுத்த முயற்சிகள் பாராட்டுக்குரியவை. அவர் நோபல் பரிசு பெறத் தகுதியானவர் என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன். மக்களைப் பற்றி அக்கறை கொண்ட ஒரு தலைவரைத் தான் நாங்கள் விரும்புகிறோம்" என்று புகழ்ந்து தள்ளினார்.
சமீபத்தில் காங்கோ மற்றும் ருவாண்டா நாடுகளுக்கு இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவர, வாஷிங்டனில் உள்ள 'ட்ரம்ப் இன்ஸ்டிடியூட் ஆஃப் பீஸ்' மையத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுவும் ட்ரம்ப்புக்கு இந்த விருது கிடைக்க ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
விருதைப் பெற்றுக்கொண்ட ட்ரம்ப், உடனடியாக ஃபிஃபா வழங்கிய பதக்கத்தைக் கழுத்தில் அணிந்து கொண்டார். "இது என் வாழ்வின் மிகச்சிறந்த கௌரவங்களில் ஒன்று" என்று அவர் நெகிழ்ந்தார். மேலும், உலகக்கோப்பையை அமெரிக்காவுடன் இணைந்து நடத்தும் கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷெய்ன்பாம் ஆகியோரைப் பாராட்டிய அவர், தனது குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்தார்.
அமைதிக்கான நோபல் பரிசைப் பெற டொனால்ட் ட்ரம்ப் தீவிரமாக முயற்சி செய்து வந்தார். ஆனால், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது. நோபல் பரிசு கைநழுவிய நிலையில், ஃபிஃபா வழங்கிய இந்தத் திடீர் விருது ட்ரம்ப்புக்கு பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது.
வழக்கமாக விளையாட்டு வீரர்களைக் கௌரவிக்கும் ஃபிஃபா, இம்முறை அரசியல் பாதையில் பயணித்து ட்ரம்ப்புக்கு விருது வழங்கியிருப்பது கால்பந்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.