
ஊழல் நடப்பது எப்படி?
உலகிலேயே அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு போட்டி உலக கோப்பை கால்பந்தாட்டமாகும். எனவே, இந்த கால்பந்தாட்ட தொடரின்போது வருவாய் பல பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு கொட்டும். இதை கருத்தில் கொண்டு, உலக கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்த பல நாடுகளும் போட்டி போடுகின்றன. உலக கோப்பை போட்டிகள் எந்தெந்த நாடுகளில் நடைபெற வேண்டும் என்று தீர்மானிப்பது பிபாதான் என்பதால், அதன் முக்கிய அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து, போட்டி நடத்தும் உரிமையை பெறுகின்றன நாடுகள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விசாரித்தது யார்?
பிபா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கடந்த 3 ஆண்டுகளாக அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு எப்.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது. அமெரிக்காவில் வைத்து, சதி திட்டங்கள் தீட்டப்பட்டதாலும், அமெரிக்க வங்கிகள் வழியாக பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாலும் எப்.பி.ஐ இதில் தலையிட்டு விசாரித்தது. அப்போது பிபா அமைப்பின் 14 உயர் அதிகாரிகளுக்கு ஊழலில் தொடர்பிருப்பது தெரியவந்தது.

எதற்காக சுவிட்சர்லாந்து?
ஊழலில் தொடர்புள்ள 7 அதிகாரிகளை, சுவிட்சர்லாந்து அரசாங்கம் தனது நாட்டில் வைத்து கைது செய்தது. அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளிக்கிடையே கைதிகளை பரிமாறும் ஒப்பந்தம் அமலில் உள்ளது. எனவே இந்த கைது நடவடிக்கைகள் சாத்தியமாயின. மேலும், 7 அதிகாரிகள் தேடப்பட்டு வருகின்றனர். சுவிட்சர்லாந்தின் வரி சலுகைகளுக்காகவே பிபா தலைமையகம் அந்த நாட்டில் அமைக்கப்பட்டதாக கூறப்படுவதுண்டு.

ஊழல் திமிங்கிலங்கள் யார்?
இந்த ஊழலில் வடஅமெரிக்கா, லத்தின் அமெரிக்கா, கரீபியன் பிராந்தியங்களை சேர்ந்த பிபா அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த நாடுகளுக்கான கால்பந்தாட்ட அமைப்பான கோன்ககாப்-பில் இவர்கள் அதிகாரிகளாகும். இதுவும் பிபாவின் துணை அமைப்புதான். கால்பந்தாட்ட உலக கோப்பை ஸ்பான்ஷர்ஷிப்புகள் மற்றும் தொலைக்காட்சி உரிமங்கள் போன்ற விவகாரங்களை இவ்வமைப்புதான் கவனித்து வந்துள்ளது. உரிமங்கள் வழங்க லஞ்சம் பெற்றுள்ளனர். இந்த அமைப்பின் தலைவர் ஜெப்ரி வெப், அதன் மாஜி தலைவர் ஜேக் வார்னர், அமெரிக்க கால்பந்தாட்ட பிரதிநிதி சார்லஸ் சக் பிளாசர் போன்றோர் இந்த ஊழலில் சிக்கிய முக்கிய புள்ளிகள்.

எதிர்கால கோப்பைகள் நிலை?
அமெரிக்க புலனாய்வு அமைப்பு, நடந்து முடிந்த கால்பந்தாட்ட உலக கோப்பை போட்டிகளில் நடந்த ஊழல்களை வெளிக் கொண்டு வந்துள்ள நிலையில், இனிமேல் நடைபெற உள்ள உலக கோப்பை தொடர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளிலும் ஊழல் மலிந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. 2018ல் ரஷ்யாவிலும், 2022ல் கத்தாரிலும், உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற உள்ளன. எனவே, இந்த உரிமைகளுக்கு ஆபத்து வருமா என்ற அச்சம் அந்தந்த நாட்டு ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஊழல் மதிப்பு என்ன?
இந்த ஊழல் சுமார் 150 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மெகா ஊழல் என்று வர்ணிக்கிறது அமெரிக்க புலனாய்வு நிறுவனம். இதில் உலகின் பிற நாடுகளில் நடந்த ஊழல்கள் சேர்க்கப்படவில்லை. அமெரிக்க பரிமாற்றம் மட்டுமே. கடந்த ஆண்டு உலக கோப்பை கால்பந்தாட்டத்தை நடத்த பிரேசில் நாட்டுக்கான செலவு 4 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். கத்தார் நாட்டுக்கு 6 பில்லியன் டாலர் அளவுக்கு செலவு பிடிக்கும் என்று தெரிகிறது. இதில் பாதி அளவுக்கு பிபாவுக்கு லாபமாக கிடைத்துவிடும்.

எந்த நாடு தயார்?
ரஷ்யா, கத்தார் நாடுகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு பிற நாடுகளில் உலக கோப்பையை நடத்தலாம் என்றால், குறுகிய காலத்தில், ஸ்டேடியங்களை தயார் செய்யவும், போட்டிகளுக்கு செலவிடவும் எந்த நாடு தயாராக உள்ளது என்பது புரியவில்லை. ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும், பிபா தரக்கட்டுப்பாடை பூர்த்தி செய்யும் அளவுக்கான ஸ்டேடியங்கள் இல்லை. ஜெர்மனி மட்டுமே முழு தகுதியோடு உள்ளது. 2006ல் இந்த நாடுதான் உலக கோப்பையை நடத்தியது.


Click it and Unblock the Notifications













