FIFA: கனடா ஏமாற்றம்.. 3 கோல் அடித்து காலி செய்த மொராக்கோ.. கால் இறுதிக்கு முன்னேறியது
ஹூஸ்டன்: ஃபிஃபா உலகக் கோப்பை 2026 கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில், கனடா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மொராக்கோ அணி கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் மொராக்கோவின் அசெடின் உனாஹி இரட்டை கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில், கனடா அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மொராக்கோ அணியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த கனடாவுக்கு ஜொனாதன் டேவிட் மற்றும் தனி ஒலுவாசெயோ ஆகியோர் கோல் அடிக்க நல்ல வாய்ப்புகளை உருவாக்கினர். இருப்பினும், மொராக்கோ கோல்கீப்பர் யாசின் போனோவின் அசாத்திய தடுப்பாட்டத்தால் முதல் பாதியில் கோல் ஏதும் விழவில்லை. ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் மொராக்கோவின் முக்கிய முன்கள வீரர் இஸ்மாயில் சைபாரி காயமடைந்து வெளியேறியது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

ஆனால், இரண்டாவது பாதியில் மொராக்கோ அணி முற்றிலும் மாறுபட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் அஷ்ரப் ஹக்கிமி கொடுத்த துல்லியமான பாஸை பயன்படுத்தி அசெடின் உனாஹி முதல் கோல் அடித்து மொராக்கோவை 1-0 என முன்னிலை பெறச் செய்தார். தொடர்ந்து ஆட்டத்தின் 82-வது நிமிடத்தில் பிரஹிம் டயஸ் கொடுத்த பாஸை பயன்படுத்தி உனாஹி தனது 2-வது கோலை அடித்தார். ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (98-வது நிமிடம்) சுபியான் ரஹிமி மற்றொரு கோல் அடிக்க, மொராக்கோ 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் தோல்வியடைந்த போதிலும் தனது உலகக் கோப்பை வரலாற்றிலேயே முதல் முறையாக நாக்கவுட் சுற்றுக்குத் தகுதி பெற்று, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ரவுண்ட் ஆஃப் 16 சுற்று வரை முன்னேறிய கனடா அணியின் போராட்டம் பாராட்டை பெற்றது.
தற்போது 34 போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் வலுவாக உள்ள மொராக்கோ அணி, தனது அடுத்த கால் இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியை வரும் ஜூலை 9 அன்று பாஸ்டன் நகரில் எதிர்கொள்ளவுள்ளது.


Click it and Unblock the Notifications
