லண்டன்: 2018ம் ஆண்டில் ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளை தங்கள் நாட்டில் நடத்த இங்கிலாந்து அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டார்களா என்பது குறித்து ஃபீஃபா அமைப்பு விசாரணை நடத்தியுள்ளது.
2018ம் ஆண்டில் ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளை தங்கள் நாட்டில் நடந்தத இங்கிலாந்து குழு முயன்றது. ஆனால் இங்கிலாந்தில் போட்டிகளை நடத்த ஆதரவு தெரிவித்து வெறும் 2 பேரே வாக்களித்தனர். இதையடுத்து இங்கிலாந்தின் முயற்சி தோல்வி அடைந்தது.

2018 மற்றும் 2022ம் ஆண்டில் ஃபீஃபா உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் நாடுகளை தேர்வு செய்யும் வேலைகள் கடந்த 2009ம் ஆண்டே துவங்கிவிட்டது. இதில் 2018ம் ஆண்டு போட்டிகளை நடத்த ரஷ்யாவும், 2022ம் ஆண்டு போட்டிகளை நடத்த கத்தாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ட்ரினிடாட் மற்றும் டொபாகோவின் தலைநகரான போர்ட் ஆப் ஸ்பெயினில் கரீபியன் கால்பந்து யூனியனைச் சேர்ந்த 160 பேருக்கு விருந்து கொடுக்க 2018ல் இங்கிலாந்தில் உலகக் கோப்பை போட்டியை நடத்த முயன்ற குழு ரூ. ரூ. 35 லட்சத்து 73 ஆயிரத்து 259 செலவு செய்தது குறித்து ஃபீஃபா விசாரணை நடத்தியுள்ளது.
இங்கிலாந்தில் ஃபீஃபா உலகக் கோப்பை போட்டிகளை நடத்த அதிகாரிகளை வளைத்துப் போடவே இந்த விருந்து என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விருந்தில் கலந்து கொண்ட ஃபீஃபா முன்னாள் துணை தலைவர் ஜாக் வார்னரை வளைக்கவே இந்த முயற்சி என்று கூறப்படுகிறது. இது குறித்து ஃபீஃபா அதிகாரி கார்சியா இங்கிலாந்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியுள்ளார். நியூயார்க்கை சேர்ந்த அட்டர்னியான கார்சியா 2018 மற்றும் 2022ம் ஆண்டுகளுக்கான உலகக் கோப்பை போட்டிகள் நடத்த நடத்தப்பட்ட போட்டிகள் குறித்த விசாரணை அறிக்கையை அடுத்த மாதம் ஃபீஃபாவிடம் சமர்பிக்கிறார்.