லண்டன் : கால்பந்து விளையாட்டை உலகம் முழுதும் நிர்வகித்து வரும் ஃபிபா அமைப்பு கொரோனா வைரஸ் பாதிப்பால் வீரர்களின் ஒப்பந்தம் மற்றும் அணி மாற்றம் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து முடிவு எடுக்க உள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கால்பந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் தான் அதிகமான கால்பந்து தொடர்கள் நடைபெறும்.
இந்த ஆண்டு நடக்க இருந்த, நடைபெற்று வந்த பல கால்பந்து தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக கடுமையாக உள்ளது.
கால்பந்து வெறியர்கள் கொண்ட இத்தாலியில் தான் பாதிப்பு உச்சகட்டத்தில் உள்ளது. அங்கே ஆயிரத்தை தாண்டி கொரோனா பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
கால்பந்து பிரபலமாக உள்ள ஸ்பெயின், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் கொரோனா கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. யூரோ 2020, கோபா அமேரிக்கா உள்ளிட்ட கால்பந்து தொடர்கள் 2021க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 2019-20 சீசன் மோசமாக பாதித்துள்ளது.
இந்த நிலையில், ஜூன் மாதம் பல அணிகளும் வீரர்களை மாற்றிக் கொள்வார்கள். அதே போல, பல வீரர்களின் ஒப்பந்தம் காலாவதி ஆகும்.
கொரோனா சமயத்தில் அணி மாற்றம் இருக்காது. அதே போல, ஒப்பந்தம் காலாவதி ஆன வீரர்கள் நிலை கேள்விக் குறியாகும்.
இதை சமாளிக்க ஃபிபா அமைப்பு திட்டமிட்டு வருகிறது. விதிமுறைகளில் மாற்றம் செய்து வீரர்களை காக்க முடிவு செய்துள்ளது. அத்துடன், போட்டிகள் நடைபெறாமல் இருக்கும் இந்த சூழ்நிலையில், கால்பந்து தொடர்களை நடத்தும் அமைப்புகளுக்கு தேவையான உதவி நிதி வழங்கவும் சிந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
எதிர்பாராத சூழ்நிலையை சமாளிக்க, எதிர்பாராத நடவடிக்கைகள், முடிவுகள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக ஃபிபா தலைவர் கியானி இன்பான்டியோ கூறி உள்ளார்.