FIFA WC: திருச்சியை விட மக்கள் தொகை கம்மி.. குட்டி நாடான கேப் வெர்டே கால்பந்து உலககோப்பையில் சாதித்தது எப்படி?
டெக்சாஸ்: உலகக் கோப்பை கால்பந்து தொடரிலே நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற மிக சிறிய நாடு என்றால் அது கேப் வெர்டே தான். அதன் மக்கள் தொகை வெறும் 5 லட்சத்து 50 ஆயிரம் பேர் தான். அதை இந்தியாவுடன் ஒப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் உள்ள திருச்சி, சேலம் போன்ற மாநகரங்களை விட பாதி மக்கள் தொகையை உள்ள ஒரு நாடு எப்படி கால்பந்து உலகில் இவ்வளவு பெரிய சாதனையை படைத்தது என்பதுதான் ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களின் ஆச்சரியமாக இருக்கின்றது.
குரூப் ஹச் பிரிவில் இடம் பிடித்து இருந்த கேப் வெர்டே அணி ஸ்பெயினுக்கு எதிராக எவ்வித கோலும் இன்றி சமன் செய்தது. அந்தப் போட்டியில் 40 வயதான கோல்கீப்பர் வோசின்ஹா, ஏழு கோல்களை தடுத்து சாதனை படைத்தார். அதன் பிறகு இரண்டு முறை உலக சாம்பியன் ஆன உருகுவே அணிக்கு எதிராக இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் போட்டியை சமன் செய்தனர்.

இதனை தொடர்ந்து சவுதி அரேபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு அணிகளும் கோல் அடிக்க முடியாமல் போட்டி சமனில் முடிந்தது. அதன்பிறகு உருகுவே அணிக்கு எதிராக ஸ்பெயின் அணி வெற்றி பெற்றதை எடுத்து கேப் வெர்டே அணி நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று சாதனை படைத்து இருந்தது.
இந்த தருணத்தில் ரவுண்ட் ஆப் 32 சுற்றில் நடப்பு சாம்பியன் ஆன அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினாவுக்கு மரண பயத்தை காட்டிய கேப் வெர்டே, இறுதியில் இரண்டுக்கு மூன்று என்ற கோல் கணக்கில் போராடி தோல்வியை தழுவியது. இதன் மூலம் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து வெளியேறினாலும், ஒட்டுமொத்த ரசிகர்களின் இதயத்தையும் கைப்பற்றி சென்றிருக்கிறது இந்த குட்டி தீவு அணி.
அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள 10 தீவுகளின் கூட்டமைப்பே இந்த கேப் வெர்டே என்ற நாடாகும். வெறும் 5 லட்சத்துக்கு உள்ள மக்கள் தொகை கொண்ட நாட்டில் இருக்கும் கால்பந்து அணி எப்படி நடப்பு உலக சாம்பியனையே ஆட்டம் காண வைத்தது என்பதை தற்போது பார்க்கலாம். இந்தியாவில் 130 கோடிக்கு மேல் மக்கள் தொகை இருந்தும், பல்வேறு வசதிகள் கட்டமைப்பு இருந்தும் நம்மால் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் தகுதி பெறவே முடியவில்லை.
ஆனால் கேப் வெர்டே அணி எந்த ஒரு வசதியும் இன்றி இவ்வளவு பெரிய சாதனையை செய்திருக்கிறார்கள். அதற்கு அவர்கள் என்ன வழிமுறைகளை தேர்ந்தெடுத்தார்கள் என்பதை தற்போது பார்க்கலாம். தங்கள் நாட்டில் கால்பந்து விளையாட உட்கட்டமைப்பு வசதி இல்லை என்பதை தெரிந்து கொண்டு, அதற்கு மாற்றாக பிளான் பி திட்டம் ஒன்றை கையில் எடுத்தனர்.
அதாவது கேப் வெர்டே நாட்டைச் சேர்ந்த வம்சாவளியினர் மற்ற ஐரோப்பிய நாட்டில் குடியேறி இருக்கிறார்கள். அதில் கால்பந்து விளையாட்டில் சிறப்பாக விளையாடும் வீரர்களை முதலில் தேர்ந்தெடுத்தார்கள். இதற்கு அவர்கள் லிங்கடின் தளத்தை பயன்படுத்தினார்கள். எப்படி லிங்கடின் மூலம் பெரிய நிறுவனங்களில் வேலைக்காக நாம் இணைவோமோ, அதே போல் கேப் வெர்டே கால்பந்து அணி நிர்வாகம் தங்கள் நாட்டுக்கு வீரர்கள் தேவை என்பது போல் லிங்கடின் மூலம் ஆட்களை தேடினார்கள்.
இப்படி போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் தங்கள் வம்சாவளி வீரர்களை தேர்ந்தெடுத்து ஒரு அணியை உருவாக்கினார்கள். தற்போது உள்ள 26 பேர் கொண்ட கேப் வெர்டே உலக கோப்பை அணியில் 14 வீரர்கள் வெளிநாட்டில் பிறந்தவர்கள். இதில் ஆறு பேர் நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டாம் துறைமுக நகரத்தை சேர்ந்தவர்கள்.
கேப் வெர்டே அணியில் உள்ள டெய்லோன் லிவ்ராமெண்டோ போர்ச்சுகல் லீக் தொடரில் விளையாடி வருகிறார். கேமரூன் அணிக்கு எதிராக தகுதி சுற்றில் கேப் வெர்டே அணி வெற்றி பெற்றது. அப்போது முதல் கோல் அடித்ததும் இவர்தான். இதேபோன்று மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னாள் வீரர் பெபே, கேப் வெர்டே அணியில் இணைந்தார்.
இந்த நிலையில் அணி தயார் செய்த பிறகு அதனை வழிநடத்துவதற்கு ஒரு பயிற்சியாளர் தேவை அல்லவா? அதனை முன்னாள் சர்வதேச வீரர் புபிஸ்டா சிறப்பாக மேற்கொண்டார். 56 வயதான புபிஸ்டா கால்பந்து போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் நாம் கோல் அடிப்பதைவிட எதிரணியை கோல் அடிக்க விடாமல் தடுக்க வேண்டும் என்ற ஃபார்முலாவை வகுத்தார்.
எப்படி ஸ்பெயின் அணி டிக்கி. டாக்கா என்ற முறையை பின் தொடர்ந்து தங்களுக்குள் பந்துகளை அடித்து போட்டியில் வெல்வார்களோ, அதேபோல் ஒரு ஃபார்முலாவை புபிஸ்டா உருவாக்கினார். அதாவது எதிரணியின் கோல் போஸ்டுக்கு வீரர்களை குவித்து ஒரு பாதுகாப்பு அரணை உருவாக்க வேண்டும். ஐந்து ஆறு வீரர்கள் சரியான கோணத்தில் நின்று எதிரணியை கோல் அடிக்க விடாமல் தடுக்க வேண்டும்.
ஒரு வேலை இவர்களை மீறி பந்து சென்றால் அதனை கோல் கீப்பர் வோசின்ஹா பிடித்து விடுவார். இதனால் பெரிய அணிகள் கூட இந்த பாதுகாப்பு அரணை உடைத்து கோல் அடிக்க முடியாமல் தடுமாறியது. இதனால் தான் ஸ்பெயின் அணி கேப் வெர்டேவிடம் கோல் அடிக்க முடியாமல் டிராவில் போட்டியை முடித்தது.
இப்படி எந்த கட்டமைப்பு வசதியும் இல்லாமல் மதியால் விதியை வென்ற நாடாக கேப் வெர்டே உருமாறி இருக்கிறது. இப்படி ஒரு நாடு இருக்கிறது என்று பலருக்கு தெரியாமல் இருந்த நிலையில் தற்போது உலகக்கோப்பை கால்பந்து தொடர் மூலம் பிரபலமாகி இருக்கிறது. இதன் மூலம் கால்பந்து விளையாட்டு மூலம் இந்த நாடு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது இதன் மூலம் பலரது வாழ்க்கையும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications


