கண்ணீருடன் வெளியேறிய தென்னாப்பிரிக்கா.. கடைசி நிமிட கோலால் வரலாற்று வெற்றி பெற்ற கனடா
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஃபிஃபா உலகக்கோப்பை 2026 கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றின் விறுவிறுப்பான போட்டியில், கனடா அணி 1-0 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் அடிக்கப்பட்ட கோலால் தென்னாப்பிரிக்காவின் உலகக்கோப்பை கனவு பரிதாபமாகத் தகர்ந்தது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற இப்போட்டியில், தென்னாப்பிரிக்க அணி தொடக்கம் முதலே மிக வலுவான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. கனடா அணியின் தீவிர தாக்குதல்களைத் தென்னாப்பிரிக்க வீரர்கள் அரண் போல நின்று தடுத்து நிறுத்தினர். குறிப்பாக, தென்னாப்பிரிக்க கோல்கீப்பர் ரான்வென் வில்லியம்ஸ் பல அபாரமான சேவ்களைச் செய்தார். மேலும், ஆப்ரி மோடிபா மற்றும் சிம்பிவ் எம்போகாசி ஆகியோர் கோல் விழும் வாய்ப்புகளை கடைசி நொடியில் தடுத்து ரசிகர்களை வியக்க வைத்தனர். இதனால் ஆட்டம் எக்ஸ்ட்ரா டைம் வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கனடா பயிற்சியாளர் ஜெஸ்ஸி மார்ஷ், காயம் காரணமாக லீக் சுற்றில் விளையாடாத நட்சத்திர வீரர் அல்போன்சோ டேவிஸை மாற்று வீரராகக் களமிறக்கினார். இவரது வருகைக்குப் பின் கனடா அணியின் வேகம் கணிசமாக அதிகரித்தது. ஆட்டத்தின் 90 நிமிடங்களும் முடிவடைந்து வழங்கப்பட்ட 5 நிமிட கூடுதல் நேரத்தின் கடைசி வினாடிகளில், கனடா அணியின் கேப்டன் ஸ்டீபன் யுஸ்டாக்கியோ ஒரு அருமையான கோல் அடித்து தென்னாப்பிரிக்காவின் தடுப்புச் சுவரை உடைத்தார்.
இந்த 1-0 என்ற கணக்கிலான வெற்றியின் மூலம், உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக கனடா அணி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தகுதி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. லீக் சுற்றைக் கடந்து முன்னேறியதே அந்த நாட்டின் மிகச்சிறந்த உலகக்கோப்பை சாதனையாக இருந்த நிலையில், தற்போது அவர்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளனர்.
மறுபுறம், கடைசி நொடி வரை சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி, போராடித் தோற்ற தென்னாப்பிரிக்க அணி உலகக்கோப்பை தொடரிலிருந்து கண்ணீருடன் வெளியேறியது. அடுத்த சுற்றில் நெதர்லாந்து மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணியை கனடா எதிர்கொள்ளவுள்ளது.


Click it and Unblock the Notifications
