FIFA WC: போர்ச்சுகலுடன் டிரா செய்து முதலிடம் பிடித்த கொலம்பியா.. ஏமாற்றிய கிறிஸ்டியானோ ரொனால்டோ
நியூயார்க்: ஃபிஃபா உலகக்கோப்பை 2026 கால்பந்து தொடரின் குரூப் கே பிரிவில் போர்ச்சுகல் அணிக்கு எதிரான போட்டியை 0-0 என டிரா செய்த கொலம்பியா அணி தங்களது பிரிவில் முதலிடம் பிடித்து ரவுண்ட் ஆஃப் 32 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. கொலம்பியா உலகக்கோப்பை வரலாற்றில் பதிவு செய்த முதல் கோல் இல்லாத டிரா இதுவாகும்.
இப்போட்டியில் இரு அணிகளும் மொத்தம் 37 முறை கோல் அடிக்க முயற்சித்தன. போர்ச்சுகல் அணி 24 முறை முயன்ற போதிலும், கொலம்பியா அணியின் வலுவான தடுப்பாட்டத்தால் கோல் ஏதும் விழவில்லை. போர்ச்சுகல் கோல்கீப்பர் தியோகோ கோஸ்டா 6 முறை கோல் விழுவதைத் தடுத்தார். ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் கொலம்பியா அடித்த ஒரு கோல் விஏஆர் பரிசீலனைக்குப் பிறகு ஆஃப்சைட் என ரத்து செய்யப்பட்டது.

இதை அடுத்து ஆட்டம் 0 - 0 என டிராவில் முடிவடைந்தது. போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இப்போட்டியில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. முன்னதாக, மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி குரூப் ஜே பிரிவில் முதலிடம் பிடித்துள்ள நிலையில், போர்ச்சுகல் அணி குரூப் கே பிரிவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இதனால், மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் (ஜூலை 19) நேருக்கு நேர் மோதும் அரிய வாய்ப்பு உருவாகியுள்ளது.
மற்றொரு போட்டியில், உஸ்பெகிஸ்தான் அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்திய காங்கோ ஜனநாயக குடியரசு அணி, 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடம் பிடித்து ரவுண்ட் ஆஃப் 32 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. காங்கோ வரலாற்றில் உலகக்கோப்பையின் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும்.
லீக் சுற்றின் முடிவில் கொலம்பியா 7 புள்ளிகளுடன் முதலிடத்தையும், போர்ச்சுகல் 5 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்தன. அடுத்த சுற்றில் கொலம்பியா அணி கானாவையும் (ஜூலை 3), போர்ச்சுகல் அணி குரோஷியாவையும் (ஜூலை 2) எதிர்கொள்ளவுள்ளன.


Click it and Unblock the Notifications

