வேலையைக் காட்டிய டொனால்ட் டிரம்ப்.. அமெரிக்க வீரரின் தடையை ரத்து செய்த ஃபிஃபா.. கொதிக்கும் பெல்ஜியம்
நியூயார்க்: நடப்பு 2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரில், அமெரிக்க வீரர் போலரின் பலோகனின் சிவப்பு அட்டைத் தடையை ஃபிஃபா அமைப்பு ரத்து செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோவிடம் மூன்று முறை தொலைபேசியில் பேசிய பிறகே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க அணியின் நட்சத்திர ஸ்ட்ரைக்கரான பலோகன், போஸ்னியாவுக்கு எதிரான ரவுண்ட் ஆஃப் 32 போட்டியில் எதிரணி வீரரின் கணுக்காலை மிதித்ததற்காக 64-வது நிமிடத்தில் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் அவருக்கு ஒரு போட்டி தடை விதிக்கப்பட்டது. நடப்பு தொடரில் 3 கோல்கள் அடித்துள்ள பலோகனுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, அதிபர் டிரம்ப் ஃபிஃபா தலைவருக்குத் தொடர்ந்து 3 முறை போன் செய்து பேசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பலோகனின் ஓராண்டு நன்னடத்தைக் காலத்தைக் கணக்கில் கொண்டு அவரது 1 போட்டி தடையை நிறுத்தி வைப்பதாக ஃபிஃபா அறிவித்தது. உலகக்கோப்பை வரலாற்றில் காட்டப்பட்ட 189 சிவப்பு அட்டைகளில், தடை விதிக்கப்படாமல் தப்பிய 2-வது வீரர் பலோகன் ஆவார். இதற்கு முன்பு 1962 உலகக்கோப்பையில் பிரேசிலின் காரிஞ்சா மட்டுமே இந்த சலுகையைப் பெற்றிருந்தார். இந்த முடிவுக்கு நன்றி தெரிவித்து டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஃபிஃபா அமைப்பின் இந்த ஒருதலைப்பட்சமான முடிவுக்கு பெல்ஜியம் கால்பந்து சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா அடுத்து பெல்ஜியம் அணியுடன் ஆட உள்ளது குறிப்பிடத்தக்கது. பெல்ஜியம் பயிற்சியாளர் ரூடி கார்சியா, "ஃபிஃபா அலுவலகத்தில் ஜூலை 5 என்பது ஐரோப்பாவின் ஏப்ரல் ஃபூல் தினமா எனத் தெரியவில்லை. உலகக்கோப்பை வரலாற்றில் இப்படி ஒரு விசித்திரமான முடிவை நான் பார்த்ததே இல்லை" என்று சாடியுள்ளார்.
நார்வே அணியின் பயிற்சியாளர் ஸ்டாலே சோல்பாக்கனும், "அரசியல் தலைவர்கள் விளையாட்டுத் தடையை மாற்றியமைப்பது விளையாட்டுக்கே ஆபத்தானது" என்று விமர்சித்துள்ளார். இன்று சியாட்டிலில் நடைபெறவுள்ள ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் அமெரிக்கா மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதவுள்ளன.
டிரம்ப் தலையீட்டால் பலோகன் விளையாட அனுமதி பெற்றுள்ளது அமெரிக்க அணிக்கு சாதகமாக அமைந்தாலும், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றின் மிகப் பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications
