FIFA உலககோப்பை: 5 முறை சாம்பியனான பிரேசிலை கதறவிட்ட ஜப்பான்.. கடைசி வரை நடந்த போராட்டம்
ஹாஸ்டன்: பிரேசில் மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், ஆட்டத்தின் 95-வது நிமிடத்தில் கேப்ரியல் மார்டினெல்லி அடித்த அதிரடி கோல் மூலம் பிரேசில் அணி திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் உலகக் கோப்பையின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பங்கேற்கும். அந்த சுற்றில் நார்வே அல்லது ஐவரி கோஸ்ட் அணியை எதிர்கொள்ளும் வாய்ப்பை பிரேசில் உறுதி செய்துள்ளது.
ஆட்டம் முடிய இன்னும் சில வினாடிகளே இருந்த நிலையில், பிரேசில் வீரர்கள் பந்தை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்தனர். புருனோ கைமரேஸ் கொடுத்த நேர்த்தியான பாஸை வாங்கிய மார்டினெல்லி, அதைத் தட்டிச் சென்று அருமையாக கோல் அடித்தார்.

கடைசி நிமிடத்தில் தலைகீழாக மாறிய ஆட்டம்
முதல் பாதியில் பிரேசில் அணிக்கு இணையாக விளையாடி, இரண்டாம் பாதியிலும் மிகக் கடுமையாகப் போராடிய ஜப்பான் அணிக்கு இந்த முடிவு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும், கார்லோ அன்செலோட்டியின் பயிற்சியின்கீழ் விளையாடிய பிரேசில் அணி இறுதி நிமிடம் வரை வெற்றிக்காகத் தொடர்ந்து போராடி, அதற்கான பலனைப் பெற்றது.
முன்னதாக, முதல் பாதியில் ஜப்பான் அணி மிகவும் ஆதிக்கம் செலுத்தியது. பிரேசிலின் டானிலோ தவறாக பாஸ் செய்த பந்தை லாவகமாகப் பிடித்த ஜப்பான் வீரர் கைஷு சானோ, கேசமிரோவைக் கடந்து பந்தை மிக நேர்த்தியாக கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலையைப் பெற்றுத் தந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்க பிரேசில் அணி முதல் பாதியில் திணறியது. ஆனால், இடைவேளைக்குப் பிறகு முற்றிலும் மாறுபட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டம் மீண்டும் தொடங்கி 10 நிமிடங்களில், கேப்ரியல் அடித்த கிராஸ் பாஸை கேசமிரோ தலையால் முட்டி கோலாக மாற்றி 1-1 என ஆட்டத்தைச் சமநிலைக்குக் கொண்டு வந்தார்.
இந்த கோலைத் தொடர்ந்து, ஐந்து முறை உலகக் கோப்பை வென்ற பிரேசில் அணி அடுத்த 3 நிமிடங்களில் அதிர்ச்சியூட்டும் வகையில் மற்றொரு கோல் அடிக்கும் வாய்ப்பை உருவாக்கியது. ஜப்பான் பகுதிக்குள் பந்தைப் பெற்ற வினிசியஸ் ஜூனியர், தன்னைத் தடுத்த டிஃபெண்டரை சாதுரியமாகக் கடந்து, ஜப்பான் எல்லைக்குள் ஊடுருவி கோல் கம்பத்தை நோக்கி பந்தை அடித்தார். ஆனால், ஜப்பான் கோல்கீப்பர் ஜியான் சுஸுகி அதைத் தடுத்து நிறுத்த, பந்து கம்பத்தில் பட்டுத் திரும்பியது.
அதன்பிறகு ஜப்பான் அணி தங்களை உஷார்படுத்திக் கொண்டது. பிரேசில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய போதிலும் கோல் அடிக்கும் வாய்ப்புகள் குறைவாகவே கிடைத்தன. ஆட்டத்தின் இறுதி நேரத்தில், ஜப்பான் வீரர் ஏஓ டனகா தனது சொந்த பாக்ஸ் பகுதிக்கு அருகே பந்தைத் தவறவிட்டார். இதைச் சரியாகப் பயன்படுத்திய மார்டினெல்லி இறுதி நேரத்தில் கோல் அடித்து பிரேசில் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இந்தப் போட்டியில் பிரேசில் தோற்றுவிடும் அளவுக்கு விளையாடியது, எனினும் அனுபவம் மூலம் வென்றது. இந்தப் போட்டியில் ஜப்பான் தோற்றாலும், ரசிகர்களின் இதயத்தை தங்களது போராட்ட குணம் மூலம் வென்றது. ஜப்பானின் வளர்ச்சியை பற்றி சொல்ல வேண்டும் என்றால், கால்பந்து தரவரிசையில் 66வது இடத்திலிருந்து தற்போது 17வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆனால் அதே காலக்கட்டத்தில் 94வது இடத்தில் இருந்த இந்தியா 134வது இடத்திற்கு சென்றுவிட்டது.


Click it and Unblock the Notifications

