23 ஆண்டுகளாக என்னை கொல்ல பார்க்கிறீங்க.. பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பரபர கருத்து
டல்லாஸ்: பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தம்மை விமர்சிப்பவர்களுக்கு காட்டமாக பதில் அளித்துள்ளார். டல்லாஸில் ஸ்பெயினுக்கு எதிரான பிஃபா உலகக் கோப்பை தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்திற்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோ பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "நான் முன்பிருந்த அதே வீரர் அல்ல என்பதை ஒப்புக்கொள்கிறேன்," என்று ரொனால்டோ தெரிவித்தார். இருப்பினும், தனது ஆட்டம் இன்னும் முடிந்துவிடவில்லை என்பதை அவர் சுட்டிகாட்டினார். நடப்பு உலகக் கோப்பையில் தான் அடித்த மூன்று கோல்களைச் சுட்டிக்காட்டிய அவர், "நான் ஒன்றும் மோசமாக விளையாடவில்லை," என்று கூறினார்.

"அணியின் இலக்குகளை அடைவதற்காக எனது உடலையும் ஆன்மாவையும் நான் எப்போதும் அர்ப்பணிக்கிறேன். நான் களத்தில் விளையாடினாலும் விளையாடாவிட்டாலும், அணிக்காக எனக்கான முக்கிய பங்கை எப்போதும் ஆற்றுவேன்," என்று அவர் கூறினார்.
"நான் முன்பே கூறியது போல, நான் விரும்பும் போது மட்டுமே எனது ஓய்வு முடிவு இருக்கும், நீங்கள் விரும்பும் போது அல்ல. நீங்கள் எப்போதும் இதே கேள்வியையே திரும்பத் திரும்பக் கேட்கிறீர்கள். இதற்கு நான் தேவையற்ற முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை, ஏனெனில் இது மிகக் குறைவான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயம்," என்று ரொனால்டோ மேலும் கூறினார்.
"கடந்த 23 ஆண்டுகளாக நீங்கள் என்னைக் கொல்ல முயன்று வருகிறீர்கள். ஆனால் அது வீண் முயற்சி, நேர விரயம் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இருந்தாலும் நீங்கள் தொடர்ந்து அதையே முயற்சி செய்து கொண்டே இருக்கிறீர்கள்," என்று அவர் காட்டமாகப் பேசினார்.
செய்தியாளர் ஒருவரை வேடிக்கையாகச் சுட்டிக்காட்டிய ரொனால்டோ, "அவருக்கு என்னை மிகவும் பிடிக்காது என்று எனக்குத் தெரியும்" என்று புன்னகையுடன் கூறி, அவரை கேள்வி கேட்க வருமாறு அழைத்தார். "உங்களில் சிலரிடம், குறிப்பாக எங்களை விரும்பாதவர்களிடம் பேசும்போது, நான் மனிதர்களின் முகங்களை நன்றாக நினைவில் வைத்திருக்கிறேன்" என்றும் அவர் கூறினார்.
நாளை ஸ்பெயினுக்கு எதிரான போட்டிதான் ரொனால்டோவின் கடைசி உலகக் கோப்பை போட்டியாக அமையுமா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. சர்வதேச கால்பந்து வரலாற்றில் அதிக கோல்களை அடித்தவரான ரொனால்டோ, தனது ஓய்வுத் திட்டத்தை வெளிப்படுத்த மறுத்துவிட்டார். ஆனால் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்பதை உறுதியாகத் தெரிவித்தார்.
"நாளை என்ன நடந்தாலும், கிறிஸ்டியானோ ரொனால்டோ தெளிவான மனசாட்சியுடன் தான் வெளியேறுவார். 100 சதவீதம் அல்ல, 1000 சதவீதம் திருப்தியுடன் நான் விடைபெறுவேன். ஏனெனில் எனது வாழ்க்கையிலும் கால்பந்திலும் எனது முழு பங்களிப்பையும் நான் கொடுத்துள்ளேன்," என்று அவர் உருக்கமாக தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications

