2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் யாருக்கும் சாப்பாடு கிடைக்காது.. சோஃபி மைதான ஊழியர்கள் போராட்டம்
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அமெரிக்காவின் முக்கிய மைதானங்களில் ஒன்றான சோஃபி மைதானத்தின் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எச்சரித்துள்ளனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற சோஃபி மைதானத்தில் அமெரிக்கா மற்றும் பராகுவே அணிகள் மோதும் தொடக்க ஆட்டம் உட்பட பல உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில், இந்த மைதானத்தில் பணியாற்றும் சமையல்காரர்கள், சர்வர்கள் என சுமார் 2,000 உணவு மற்றும் உபசரிப்புத் துறை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தங்களுக்குள் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர்.

மைதானத்தின் உணவு விநியோக நிறுவனமான லெஜண்ட்ஸ் குளோபல் உடனான ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் இந்த அதிருப்திக்குக் குறைந்த சம்பளம் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கும் சட்டவிரோத குடியேற்றக் கட்டுப்பாடுகள் ஆகியவையே முக்கியக் காரணமாகும்.
'யுனைட் ஹியர் லோக்கல் 11' என்ற தொழிற்சங்கத்தின் இணைத் தலைவர் கர்ட் பீட்டர்சன் கூறுகையில், "ஊழியர்களால் தங்களின் வீட்டு வாடகையைக் கூட கொடுக்க முடியாத நிலையில், இந்த உலகக் கோப்பையால் என்ன பயன்? நாங்கள் வேலைநிறுத்தம் செய்ய நேர்ந்தால், உலகக் கோப்பையின் 1,00,000 டாலர் மதிப்புள்ள விஐபி அறைகளில் குடிநீர் பாட்டில்களும் சிப்ஸ்களும் மட்டுமே மிஞ்சும்" என்றார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டறிந்து வெளியேற்றும் ஐசிஇ (ICE) ரெய்டுகள் குறித்து உலகக் கோப்பை மைதானங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் ராபர்ட் லூனா, அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை உலகக் கோப்பை பாதுகாப்புப் பணிகளில் மட்டுமே ஈடுபடும் என்றும், குடியேற்றக் கட்டுப்பாடுகளில் தலையிடாது என்றும் உறுதியளித்துள்ளார்.
ஆனாலும், தொழிற்சங்கத்தினர் இந்த வாக்குறுதியை முழுமையாக நம்பவில்லை. அட்லாண்டா மற்றும் மியாமி போன்ற பிற உலகக் கோப்பை நடத்தும் நகரங்களிலும் இதே போன்ற அச்சம் நிலவி வருகிறது. லெஜண்ட்ஸ் குளோபல் நிறுவனம் பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெற உள்ள இந்த உலகக் கோப்பை தொடரில் 48 அணிகள் பங்கேற்று மொத்தம் 104 போட்டிகள் நடைபெற உள்ளன. ஜூன் 13 முதல் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்க வாய்ப்புள்ளதால், இது ஃபிஃபா உலகக் கோப்பை நிர்வாகத்திற்குப் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
