மெஸ்ஸி காலை மிதித்தால் ஒண்ணுமில்லை.. அமெரிக்க வீரர் மிதித்தால் தண்டனையா? ரசிகர்கள் ஆவேசம்!
நியூயார்க்: ஃபிஃபா உலகக் கோப்பை 2026 கால்பந்து தொடரில், நடுவர்களின் ஒருதலைப்பட்சமான முடிவுகளுக்கு எதிராக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். அமெரிக்க வீரருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்ட நிலையில், அதே போன்ற தவறைச் செய்த ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு எந்த கார்டும் வழங்கப்படாதது ரசிகர்களை ஆவேசமடையச் செய்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற போஸ்னியாவுக்கு எதிரான ரவுண்ட் ஆஃப் 32 போட்டியில், அமெரிக்கா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இப்போட்டியின் இரண்டாவது பாதியில், அமெரிக்க ஸ்ட்ரைக்கர் ஃபோலாரின் பாலோகன் எதிரணி வீரர் தாரிக் முஹாரெமோவிச்சின் கணுக்காலை மிதித்ததாகக் கூறி நடுவர் ரபேல் கிளாஸ் அவருக்கு ரெட் கார்டு வழங்கி வெளியேற்றினார்.

ஆரம்பத்தில் நடுவர் கார்டு காட்டாத போதிலும், விஏஆர் (VAR) பரிசோதனைக்குப் பின் ரெட் கார்டு காட்டப்பட்டது. இதனால் பெல்ஜியத்திற்கு எதிரான ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் பாலோகன் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த முடிவைக் கண்ட ரசிகர்கள், சில நாட்களுக்கு முன்பு அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி செய்த இதே போன்ற ஒரு ஃபவுலைச் சுட்டிக்காட்டி ஃபிஃபாவின் இரட்டை நிலையை விமர்சித்து வருகின்றனர். அல்ஜீரியாவுக்கு எதிரான போட்டியில், அர்ஜென்டினா 1-0 என முன்னிலையில் இருந்தபோது, எதிரணி கேப்டன் ஐசா மாண்டியின் காலின் பின்புறத்தில் மெஸ்ஸி தனது பூட்ஸ் காலால் மிதித்தார். ஆனால், அதற்கு நடுவர் ஷிமோன் மார்சினியாக் மஞ்சள் கார்டு கூட காட்டவில்லை. விஏஆர் நடுவர்களும் அதனைப் பரிசோதிக்க மறுத்து சாதாரண ஃபிரீ கிக் மட்டுமே வழங்கினர்.
இதுகுறித்து அதிருப்தி தெரிவித்துள்ள அமெரிக்க பயிற்சியாளர் மொரிசியோ போச்செட்டினோ, "பாலோகன் வேண்டுமென்றே அந்தத் தவறைச் செய்யவில்லை. பந்துக்காகப் போராடும்போது தற்செயலாக நடந்ததற்கு ரெட் கார்டு வழங்கியது முற்றிலும் தவறு" என்று கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் ரசிகர்கள், "மெஸ்ஸிக்கு ஒரு நியாயம், அமெரிக்க வீரருக்கு ஒரு நியாயமா? பெரிய வீரர்களுக்கு ஒரு விதி, சாதாரண வீரர்களுக்கு ஒரு விதியா?" என்று ஃபிஃபா நடுவர்களைக்க் கடுமையாகச் சாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications

