குட்டி பிரான்ஸ் புதுச்சேரி
பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து புதுச்சேரி விடுதலை பெற்றிருந்தாலும், புதுச்சேரியில் தற்போதுவரை அதிகளவு பிரான்ஸ் நாட்டினர் வசித்து வருகின்றனர். புதுச்சேரியில் இன்றளவும் அதிகமாக பிரெஞ்சு கலாச்சாரத்தை பின்பற்றி வருவதால் புதுச்சேரியை குட்டி பிரான்ஸ் என்றே அழைத்து வருகின்றனர்.
திரை
இந்நிலையில் புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டினர் அதிகளவு வசித்து வருவதால் புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரை சாலையில் பிரான்ஸ் மற்றும் குரேஷியா இடையிலான உலகக்கோப்பை கால்பந்து இறுதி ஆட்டம் பெரியத்திரையில் ஒளிபரப்பட்டது. பிரான்ஸ் மக்கள் மட்டுமில்லாமல் தமிழர்களும் இந்த போட்டியை கூட்டமாக கண்டுகளித்தனர்.
பயணிகள்
இப்போட்டியினை புதுச்சேரி மக்கள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான வெளி மாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கண்டு ரசித்தனர். மேலும் பொதுமக்களுடன் சேர்ந்து புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோரும் கண்டு ரசித்தனர்.
பெரிய கொண்டாட்டம்
இறுதியாக 4-2 என்ற புள்ளி கணக்கில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து புதுச்சேரி கடற்கரை சாலையில் கூடியிருந்தவர்கள் அனைவரும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடற்கரை சாலையில் எங்கு பார்த்தாலும் வெற்றி கொண்டாட்டங்களாக காணப்பட்டது.
முதல்வர்
இந்த வெற்றி குறித்து முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில், உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் பிரான்ஸ் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிப்பதாகவும், புதுச்சேரியும் - பிரான்ஸ்சும் வெவ்வேறல்ல. இது புதுச்சேரிக்கு கிடைத்த வெற்றி என்றார். இதேபோல் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் தனது வாட்ஸ்அப் பக்கத்தில் பிரான்ஸ் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நன்றி: ராஜேஷ்வரி